2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

'சட்டத்துக்கு அப்பால் மஹிந்தவுக்குப் பாதுகாப்பு'

Thipaan   / 2016 ஏப்ரல் 07 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 103 இராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருந்தமை, சட்டத்துக்கு முரணான வகையிலேயே இடம்பெற்றிருந்தது. இவ்வளவு காலமும் நடந்த இந்தத் தவறைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன' என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர்,

'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 103பேரும் இராணுவத்தைச் சேர்ந்த 103பேரும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லாத போது, இராணுவ பாதுகாப்பு வழங்கவேண்டிய சட்ட நடைமுறையொன்று இல்லை.

சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது, இது தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டது. இராணுவத்தினருக்கு பதிலாக, அவர்களுக்கு ஈடான பயிற்சிபெற்ற விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இவ்வளவு காலமும் செய்த தவறை, இவ்வாறாக நிவர்த்தி செய்வோம்' என்றார்.

கேள்வி: அப்படியானால், இவ்வளவு காலமும் சட்டத்துக்கு முரணாகவா இராணுவத்தை வழங்கியிருந்தீர்கள்?

பதில்: உண்மையைச்சொல்லப்போனால், அது தான் உண்மை.

'இந்த நாட்டின் ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ இராணுவ பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், முன்னாள் ஜனாதிபதிக்கு 103 இராணுவத்தனரையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 50 இராணுவத்தினரையும் வழங்கியிருந்தோம்' என்றும் ஹெட்டியாராச்சி கூறினார்.

'அவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாகப் பரவியுள்ள வதந்தி பொய்யானதாகும். சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களை அனுப்பியுள்ளோம். இப்போது அவரின் பாதுகாப்புக்கென இராணுவம் மற்றும் பொலிஸார் என 256பேர் கடமையில் உள்ளனர்.

பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை படிப்படியாகக் குறைத்து, அவர்களுக்குப் பதிலாக விசேட அதிரடிப்படையினரையும் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நியமிப்போம். தவிர, பாதுகாப்பை ஒருபோதும் குறைக்க மாட்டோம். தேவையான பாதுகாப்பை வழங்குவோம்' என்று பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X