Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலம் பொருந்தியவர்கள் மட்டுமன்றி, பிரபலமான தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை நீக்கியதனூடாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிளவு படுத்திவிட்டார் என்று, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபலமான அமைப்பாளர்கள் சிலரை நீக்கி, புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களான பவித்ரா வன்னியாராச்சி, கெஹலிய ரம்புக்வெல, சி.பி.ரத்நாயக்க, காமினி லொக்குகே, ரோஹித அபேகுணவர்த்தன, மஹிந்த யாபா அபேவர்த்தன உள்ளிட்டவர்கள் அமைப்பாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களைப் பழிவாங்கும் புதிய முறையாகும்.
சுதந்திரக் கட்சியை இல்லாதொழிக்கும் படிமுறையின் இரண்டாவது கட்டத்தையே நாங்கள் இம்முறை கண்டுகொண்டிருக்கின்றோம். இதன் முதலாவது கட்டம், சுதந்திரக் கட்சியினால் நிர்வகிக்கப்பட்டு வந்த அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்பட்டமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்த உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதன் மூலம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெளிவான நன்மைகள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரை பழிவாங்குகின்றோம் என்ற நோக்கில், ஐக்கிய தேசியக் கட்சியையே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வளர்த்துக்கொண்டிருப்பதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மஹிந்த வருவார்'
-பாநூ கார்த்திகேசு
'குருநாகல், மாதம்பிட்டிய மைதானத்தில், செப்டெம்பர் 4ஆம் திகதியன்று இடம்பெறும் சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டுக்கு, முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் போசகருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்புவிடுத்தோம். அவர் அதனை ஏற்றுக்கொண்டார். அம்மாநாட்டில் அவர் நிச்சயமாக பங்கேற்பார்' என்று, கட்சியின் பொதுச் செயலாளரும் கமத்தொழில் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
'மாநாட்டுக்கு வருகைதரும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அருகாமையில் அமர்ந்திருப்பார். கட்சியின் மாநாட்டுக்கான அழைப்பு, அனைத்துத் தரப்பினருக்கும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மஹிந்த ராஜபக்ஷவுக்கும்விடுக்கப்பட்டிருக்கின்றது. அவரும் வருகைதருவார்.
விழா ஏற்பாட்டுக்குழுவிலிருந்து ஒழுங்கான முறையில் கட்சியின் சார்பில் செயற்படாதவர்கள் நீக்கப்பட்டனர். கடந்த காலங்களில், நான் உட்பட பல ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள், கட்சியைப் பலப்படுத்தாமல் தனிமனிதரையும் ஒரு குடும்பத்தையும் மாத்திரம் பலப்படுத்தியிருந்தோம். ஆனால், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியில் நின்று செயலாற்றக்கூடியவர்களை உருவாக்குவதற்கு முன்னிற்கின்றோம்.
'கட்சியின் அமைப்பாளர்களில் பலரை, ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் என்பதாலேயோ, மஹிந்தவாதிகள் என்பதாலேயோ நாங்கள் விலக்கவில்லை. கட்சிக்கு உண்மையான முறையில் செயற்படவில்லை, அதனாலேயே பதவியிலிருந்து விலக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தமுறை நியமிக்கப்பட்ட அமைப்பாளர்களும் மஹிந்த, மைத்திரி, சந்திரிகாவுடனும் கட்சியுடனும் நன்கு இணைந்து செயலாற்றியவர்களே, அதனாலேயே அவர்களை நியமித்துள்ளோம்.
'தனிநபர் பலம் இங்கு பயன்படுத்தப்படாது. கட்சியைப் பலப்படுத்தும் வகையில் செயற்படுபவரே எமக்குத் தேவை எனத் தெரிவித்தார். அந்தவகையிலேயே, புதிதாக கட்சிக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்சி உறுப்பினர்களின் பற்றாக்குறை நிலவுகின்றது. அதனை நிரப்புவதற்காகச் செயற்படுவோம். கடந்த காலங்களில் 5,000, 7,000 என மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இம்முறை 50 ஆயிரமாக உயரும்' என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
'மஹிந்த வரமாட்டார்'
குருநாகலில் நடைபெறவிருக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கமாட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர், முக்கிய வேலைகளுக்காக வெளிநாட்டுக்கு செல்லவிருப்பதனால், அந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களை, மிரிஹானையில் உள்ள வீட்டில் வைத்து மஹிந்த ராஜபக்ஷ, புதன்கிழமை இரவு சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago