2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

’1001’ ஐ விட்டார் ஜனாதிபதி அனுர

Editorial   / 2026 மார்ச் 24 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரை காலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக மாத்திரம்  ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டிருந்த விசேட அறை, செவ்வாய்க்கிழமை (24) முதல் பொதுமக்களின் சிகிச்சை நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, சுகாதார அமைச்சு மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.

ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை, 1000 கட்டில்களைக் கொண்ட வசதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும், அன்றைய திட்டத்தின்படி ஜனாதிபதியின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 1001 ஆம் இலக்கத்தைக் கொண்ட இந்த விசேட அறை மேலதிகமாகச் சேர்க்கப்பட்டிருந்தது.

வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 42 ஆண்டுகளில், இந்த அறை மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஜனாதிபதி ஒருவரின் வருகையை எதிர்பார்த்து, சாதாரண நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படாமல் பல ஆண்டுகளாக இது பராமரிக்கப்பட்டு வந்தது.

அரச சொத்துக்களையும் வளங்களையும் மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விசேட அறை, வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சாதாரண நோயாளிகளின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .