2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

’15 - 20 வருடங்களில் நாடு பாலைவனமாக மாறும்’

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுச்சூழலைப் பாதுகாக்காவிடின், 15 - 20 வருடங்களில், நாடு பாலைவனமாக மாறுவதைத் தடுக்க முடியாதென, ஜனாதிபதி தெரிவித்தார்.

எனவே, சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய அக்கறையோடு, மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாக்கவும் நாடு பாலைவனமாக மாறுவதைத் தடுக்கவும், அனைவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென, ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

கண்டி மாநகரசபை எல்லைக்குட்பட்ட துனுமடலாவ பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்திலுள்ள ஃபைனஸ் மரங்களை அகற்றி, அதற்குப் பதிலாக அங்கு உள்நாட்டு வன வளர்ப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (06) அப்பிரதேசத்தில் இடம்பெற்றபோதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தூய்மையான பசுமை நகரைக் கட்டியெழுப்பி, உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாக்கும் “துரு பிரஜாவ” எனும் பெயரில் இச்செயற்றிட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதை ஆரம்பித்து வைக்கும் முகமாக, ஜனாதிபதி அங்கு இலுப்பை மரக்கன்றொன்றை நாட்டினார்.

நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, 28 சதவீதமாகக் காணப்படும் இந்நாட்டின் வனப் பரம்பல், வருடாந்தம் 1.5 சதவீதமாகக் குறைவடைந்து வருவதாகக் கூறினார். தொடர்ச்சியாக இவ்வாறு வனப்பரம்பல் வீழ்ச்சியடையுமாயின் 15 - 20 வருடங்களுக்குள் நாடு பாலைவனமாக மாறுவதை தவிர்க்க முடியாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலச் சந்ததியினரின் நன்மைக்காக நாட்டின் வன வளங்களைப் பாதுகாப்பதற்கு அனைவரும் நிபந்தனைகளின்றி ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தினார்.

மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மாத்தளை நகர பிதா டல்ஜித் அலுவிகார, கண்டி நகர பிரதி மேயர் இலானி ஆப்தீன், பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .