2025 ஜூன் 23, திங்கட்கிழமை

’18-19ஐ இரத்து செய்க’

Editorial   / 2019 ஜூன் 24 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு சிறந்த நாடாக, நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசமைப்பின் 18ஆவது மற்றும் 19ஆவது திருத்தங்களை இரத்து செய்யவேண்டுமெனத் தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன, 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்காவிடின், இந்த அரசாங்கம் சிறந்ததோர் அரசாங்கமாக இருந்திருக்கும் என்றார்.

கடந்த நான்கரை வருடங்காலத்தில், அரசாங்கத்தின் செயற்பாடுகளை திரும்பி பார்க்கவேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, தற்போதை அரசாங்கம் மோசமான அரசாங்கமாக மாறுவதற்கு, 19ஆவது திருத்தமே காரணமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (23) இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் கலந்துகொண்டார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 40வருட நிறைவை கொண்டாடுகிறது. அதேபோல எங்களுடைய அரசாங்கத்துக்கு நான்கரை ஆண்டுகளுகள் நிறைவடைந்துள்ளன எனத் தெரிவித்த ஜனாதிபதி, இன்னும் நான்கைந்து மாதங்களில் தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றார்.

ஆகையால், இந்த நான்கரை வருடகாலத்தில் அரசாங்கம் என்றவகையில், நாங்கள் சரியாக செயற்பட்டோமா அல்லது தவறிழைத்துள்ளோமா என்பது தொடர்பில் தேடியறிந்து பார்க்கவேண்டும் என்றும் அவர் குற்றிப்பிட்டார்.

ஜனாதிபதியும் பிரதமருக்கும் கயிழுக்கின்றனர் என்றக் குற்றச்சாட்டொன்று நாட்டு மக்களிடத்தில் உள்ளதென தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபாலா அவ்வாறானதொரு நிலைமை உருவாவதற்கு 19ஆவது திருத்தமே பிரதான காரணமாக அமைந்திருந்தது என்றார்.

“18ஆவது திருத்தம் முற்றிலும் எதேச்சாதிகார சர்வாதிகாரம் முறைமைக்கானது. அது எவ்விதத்திலும் தகுதியற்றது. அந்த 18ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கே, நாங்கள் ஆட்சிப்பீடமேறினோம்” என்றார்.

எனினும், 19ஆவது திருத்தததினால் இந்நாட்டில், அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டது. அதில் ஒரு தலைமைத்துவம் இல்லாமற் போனது, இந்தத் திருத்தத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் இரு பக்கங்களில் இழுத்துக்கொள்ளும் முறைமையொன்று ஏற்பட்டது எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19ஆவது திருத்தத்தினால் நாடு, நிலையற்ற தன்மைக்குச் சென்றது.

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும் எதிர்காலத்தில் நல்லாட்சியை நாட்டினுள் ஸ்தாபிப்பதற்கும் அரசியலமைப்பின் 18 மற்றும் 19வது திருத்தச் சட்டங்கள் இரத்துச் செய்யவேண்டும்.

18ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்பட்ட மன்னர் ஆட்சி மற்றும் சர்வாதிகார தோற்றத்தின் காரணமாக புதிதாக 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினாலும், அதனூடாக ஒரு அரசியல் தலைமையின் கீழ் பயணிக்க முடியாத நிலை தோன்றி இருப்பதனால் நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் நல்லாட்சி அரசின் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்கு வலுவான சக்தியாக கருதப்படும் சுமார் 16 இலட்சம் அரச ஊழியர்கள் ஊழல் மற்றும் மோசடிகளை தவிர்த்து தங்களது கடமைகளை சரிவர ஆற்றுவார்களேயானால் பொதுமக்களின் தேவைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .