2025 மே 15, வியாழக்கிழமை

மலையக கட்சிகள் இன்னும் முடிவில்லை

Kanagaraj   / 2015 ஜூன் 30 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், 'நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பது தொடர்பில்  இன்னும் முடிவு காணப்படவில்லை. கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து விரைவில் தெரிவிப்போம்' என்றார்.

'இ.தொ.கா.விலிருந்து பிரிந்து சென்றவர்களும் வெளியில் இருப்பவர்களும் எம்முடன் இணைந்துகொள்வதற்கு முயற்சிக்கின்றனர்.  நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கா எம்முடன் இணைந்துகொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரை இணைந்துகொள்வது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிய கட்சிகளுடன் இணைந்தே போட்டியிடுவோம்' என்று முத்துசிவலிங்கம் மேலும் கூறினார்.

தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பி.திகாம்பரம், 'நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். மனோ கணேசனும்  இராதாகிருஷ்ணனும் பேச்சுவார்ததையில் கலந்துகொள்ளவுள்ளனர். அந்த பேச்சுவார்த்தையின் பின்னர் தீர்மானிக்கப்படும்' என்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான மனோ கணேசன் கூறுகையில், 'நாடாளுமன்ற தேர்தலில் தனித்தா அல்லது ஏதாவது கட்சியில் இணைந்தா போட்டியிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றோம். எமது புதிய கூட்டணியில் இ.தொ.கா, பிரபா கணேசன் உள்ளிட்டோரை இணைத்துகொள்வது என்ற  கேள்விக்கே இடமில்லை. அவரவர் அவர்களுடைய வேலைகளை பார்த்துக்கொள்ளலாம்' என்றார்.

தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி இராஜங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ.இராதாகிருஷ்ணன், 'நாடாளுமன்ற தேர்தலில்  போட்டியிடுவது தொடர்பில், மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுக்கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. அதன்போது தேர்தல் தொடர்பில் கலந்தாலோசிப்போம்.  அதேபோல, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணில் உள்ள மூவருடனும் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்' என்றார்.

அத்துடன், 'புதிய கூட்டணியில் யாராக இருந்தாலும் இணைந்துகொள்ள முடியும். எமது கட்சியின் வாசல் திறந்தே உள்ளது.  ஆனால் அவர்கள் இணைவார்களா என்பது சந்தேகமே' என்று இராதாகிருஷ்ணன் மேலும் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .