2025 மே 17, சனிக்கிழமை

எனக்கு எம்.பி பதவி கிடைத்தமை மு.கா.வுக்கு காழ்ப்புணர்ச்சி: ஹிஸ்புல்லாஹ்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பேரின்பராஜா திபான்

தமது மாவட்டத்துக்கு தேசியப்பட்டியல் மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவது கிடைக்கவேண்டும் என நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் கோருகின்ற நிலையில், எனக்குக் கிடைத்த தேசியப்  பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இல்லாமற்செய்ய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸானது முயற்சிக்கிறது என முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கொழும்பு-03, பேர்ல் கிராண்ட் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் பண பலத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி பல வேலைகளில் ஈடுபட்டனர்.

அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட வேட்பாளர்கள் அனைவரும் அவ்வாறே செயற்பட்டனர்.

தேசியப்பட்டில் மூலம் எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வெள்ளிக்கிழமை(21) அறிவித்ததையடுத்து, எனது கட்சி ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதனைப் பொறுக்கமுடியாத   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கல் மற்றும் போத்தல்களைக்கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த எமது ஆதரவாளர்கள் மூவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் அனமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

காயமடைந்தவர்களில் ஒருவரான புதிய காத்தான்குடி மாதர் சங்கத் தலைவி  பஸ்லியா, எமது கட்சி ஆதரவாளர். அவர்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர் என  தவறான செய்தி பரப்பிவருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மு.கா. மற்றும் ஐ.ம.சு.கூ ஆதரவாளர்கள் 8பேர் கைதுசெய்யப்பட்;டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, காத்தான்குடியிலும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் சனிக்கிழமை(22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்க கட்சியின் செயற்பாட்டை கிழக்கு மாகாணத்தில் நிறுத்துவதற்கான காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையாகும்.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிப்பீர்களா என ஊடகவியலாளரொருவர் கேட்டபோது,

தேசிய அரசாங்கத்துக்கு எனது பூரண ஒத்துழைப்பை நல்குவேன், மலையக மற்றும் முஸ்லிம் மக்கள் 20ஆவது திருத்தத்தினால் பாதிக்கப்படுவதாகவும் அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால்  தான் பூரண ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் முதல்வர் அஸ்வர், முன்னாள் முதல்வர் சப்ரி, ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .