2025 மே 19, திங்கட்கிழமை

தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது: மோடிக்கு ஜெயா கடிதம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமை தமிழக மீனவர்களுக்கு உள்ளது. இதுகுறித்து தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளேன் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள 35 தமிழக மீனவர்களையும், 31 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அனுப்பிய கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்ட மற்றொரு சம்பவம் குறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

ஒக்டோபர் 1ஆம் திகதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களது மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் எதுவும் இல்லாத அப்பாவி இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை போர் வெறியோடு தாக்குதல் நடத்தி வருவது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரியமான பாக்.நீரிணை கடற்பகுதிகளில் மீன் பிடிக்கும் அப்பாவி தமிழக மீனவர்களை மிரட்டும் நோக்கத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்சினையில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களது படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர ஏற் கெனவே இலங்கை சிறையில் உள்ள 28 மீனவர்கள், 31 படகுகளை விடுவிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X