2025 ஜூன் 19, வியாழக்கிழமை

20ஐ நிறைவேற்றுவதில் சிக்கல்: அரசாங்கத்துக்கு 2/3 இல்லை

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம், அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை, செப்டெம்பர் 2ஆம் திகதியன்று, வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டிருந்தது.

ஜனாதிபதிக்கு ஆகக்கூடுதலான அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே ஆகக் கூடுதலான திருத்தங்கள் 20ஆவது திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன எனக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், அந்தத் திருத்தத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி ஆகியன, 20ஆவது திருத்தம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, ஆளும் அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லா​த ​நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை போதுமானதென சட்டமா அதிபர் தப்புல டி​ லிவேரா அறிவித்திருந்தார். எனினும், தற்போதைய நிலைமையில், நாடாளுமன்றத்தில் ஆளும் அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமல் இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 145 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

அதில், சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்தன, மரண தண்டனைக் கைதியான சொக்கா மல்லி என்றழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர ஆகிய இருவரையும் நீக்கிவிட்டால், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 143ஆகும்.

அவர்களுக்கு மேலதிகமாக, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பங்காளிக் கட்சிகளான, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அத்தாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசன்துறை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் அங்கம் வகிப்போர் அடங்களாக, அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்காக 05 உறுப்பினர்கள் மேலதிகமாக உள்ளனர். அவர்களையும் சேர்த்தால் ஆளும் கட்சியில் ​இருக்கும் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 148ஆகும்.

தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில், சபாநாயகர் வாக்களிக்க வேண்டுமாயின், அவருடன் சேர்த்து ஆளும் தரப்பில் 149 பேர் மட்டுமே தற்போது உள்ளனர். இதனால், எதிரணியில் இருக்கும் உறுப்பினர்கள் சிலரை, அரசாங்கத்துக்கு இழுத்துக்கொள்ளும் வகையில் பேரம் பேசுதல்கள் இடம்பெறுவதற்காக, தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .