Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 09 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவினால் நிதியுதவியளிக்கப்பட்ட English Access புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்த யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் நுவரெலியாவைச் சேர்ந்த 90 இரண்டாந்தரப் பாடசாலை மாணவர்களுக்கான பட்டமளிப்புவிழாவினை இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (08 ) அன்று கொண்டாடியது.
காலியில் இடம் பெற்ற இவ் வைபவத்தில், Smart International Professionals for Leadership Education (SIPLEE) இன் பணிப்பாளர் பேராசிரியர் காமினி பொன்சேகா மற்றும் அமெரிக்கத்தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
SIPLEE உடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் இந்த இலவச இரு வருட நிகழ்ச்சித் திட்டமானது, பொருளாதாரரீதியாக பின் தங்கிய நிலையிலுள்ள இளையோருக்கு தீவிர ஆங்கில மொழி மற்றும் தலைமைத்துவப்பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளை விரிவுபடுத்தும் அதேவேளை அமெரிக்க மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான உறவுகளையும் பலப்படுத்துகிறது.
இவ் வைபவத்தில் உரைகளை ஆற்றியும், ஒரு சிறு நாடகத்தை அரங்கேற்றியும் பாடல்களைப் பாடியும் Access மாணவர்கள் தமது வளர்ந்து வரும் தன்னம்பிக்கையையும் ஆங்கில மொழிப்புலமையையும் வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் சாதனைகளைப்பாராட்டி, இந் நிகழ்ச்சித்திட்டம் கொண்டுள்ள பரந்ததாக்கத்தை அடிக்கோடிட்டுக்காட்டிய இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலீசங் பின்வருமாறு குறிப்பிட்டார்:“ ஆங்கில மொழியினைப் போதிப்பதற்கு மேலதிகமாக Access போன்ற நிகழ்ச்சித் திட்டங்கள் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களையும் மேற்கொள்கின்றன.
இம்மாணவர்கள், தொழிநுட்பம் முதல் அரச சேவை வரை, தாம் தேர்ந்தெடுக்கும் எந்த வொரு துறையிலும் வெற்றி பெறுவதற்கு உதவக்கூடிய தகவல் தொடர்புத் திறன், தன்னம்பிக்கை மற்றும் உலகளாவிய மனநிலை ஆகியவற்றை விருத்தி செய்து கொள்கிறார்கள்.
இது இலங்கையிலும் அதற்கு அப்பாலும் தலைமை தாங்கி வழி நடத்துவதற்குத் தேவையான திறன்களை அடுத்ததலைமுறைக்கு வழங்குவதைப் பற்றியதாகும்.” கல்வி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களை வலுவூட்டுவதானது எமது இரு நாடுகளுக்கும் மற்றும் உலகளாவிய சமூகத்திற்கும் பலமான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான ஒரு உலகத்தை உருவாக்குவதால், Access போன்ற முன் முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவி செய்கிறது.
ஆங்கில Access நிகழ்ச்சித் திட்டம் பற்றி:ஆங்கில Access புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் என்பது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நிதியளிக்கப்படும் ஒரு உலகளாவிய முன் முயற்சியாகும்.
இது பொருளாதார ரீதியாக பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு அமெரிக்க ஆங்கிலம், தலைமைத்துவம் மற்றும் தொடர்பாடல் திறன்களில் இரு வருட இலவச பயிற்சியினை வழங்குகிறது.
அமெரிக்கத் தூதரகத்தினால் நிதியளிக்கப்படும் இந் நிகழ்ச்சித் திட்டமானது இலங்கையில் ஐந்து இடங்களில் உள்ளூர் கல்வியாளர்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாணவர்களின் ஆங்கிலப்புலமையை மேம்படுத்துவது மட்டுமன்றி, அவர்களின் தன்னம்பிக்கை, குடிமை விழிப்புணர்வு,அமெரிக்க கலாச்சாரம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் பற்றிய புரிதலையும் Access நிகழ்ச்சித் திட்டம் அதிகரிக்கிறது.
2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந் நிகழ்ச்சித்திட்டமானது நாடு முழுவதுமுள்ள 1,300 இற்கும் மேற்பட்ட இளைஞர்களை வலுவூட்டியுள்ளது.Access நிகழ்ச்சித்திட்டத்தை நிறைவு செய்த பல மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்கும், போட்டித் தன்மை வாய்ந்த அமெரிக்க பரிமாற்ற புலமைப்பரிசில்களை வெல்வதற்கும், கல்வி, தொழில்நுட்பம், வணிகம் மற்றும் அரச சேவை போன்ற தொழில்களில் நுழைவதற்கும் வாய்ப்பைப் பெறுவதுடன் அரச மற்றும் தனியார் துறைகளில் தலைமைப்பாத்திரங்களையும் வகிக்கின்றனர்.
நிஜ உலக தொடர்பாடல் மற்றும் தனிப்பட்ட விருத்தியினை வலியுறுத்தும் ஊடாடும், மாணவர்களை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி இலங்கையைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த ஆங்கில மொழி தொழில் வாண்மையாளர்களால் Access வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் முன் முயற்சிகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தயவு செய்து https://lk.usembassy.gov/எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடுவதுடன் சமூக ஊடகங்களில் @USEmbSL இனைப் பின் தொடரவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago