2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

’அரச புலனாய்வுத் தகவல்கள் வெளியாவதை அனுமதியேன்’

Editorial   / 2019 ஜூன் 08 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால், புலனாய்வு அதிகாரிகள் வரழைக்கப்பட்டு, அரச புலனாய்வு தகவல்கள், ஊடகங்களின் முன்னிலையில் வெளிப்படுத்தப்படுவதை, தான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில், நேற்று (07), பிற்பகல் இடம்பெற்ற பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான மாதாந்தக் கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இதுவரையில் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிகள் என்பதோடு, தற்போது சேவையிலுள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எவரையும், தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அனுப்பப் போவதில்லை என்பதோடு, அவர்களது செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பை, தானே ஏற்றுக்கொள்வதாகவும் ​அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான 05 வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டுவரும் பின்னணியில், தெரிவுக்குழுவொன்றை நியமித்து விசாரணை செய்தல், உயர் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என, சட்டமா அதிபர் தனக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், தான் அதை, சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறினார்.

அத்தோடு, ஜனாதிபதி ஒருவரால் சமர்ப்பிக்கப்படும் அத்தகைய கடித ஆவணங்கள், நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்திலேயே, உத்தியோகப்பூர்வமாக சபாநாயகரால் முன்வைக்கப்படுகின்ற போதிலும், சபாநாயகர் இவ்விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் எதுவித கருத்துக்களையும் வெளியிடாமை தொடர்பில் தான் வருத்தமடைவதாகவும்  அவர் இதன்போது கூறியுள்ளார்.

இதன்போது, 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளின்போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, 25 இலட்ச ரூபாய் நிதி அன்பளிப்பை, ஜனாதிபதி வழங்கினார்.

அத்தோடு சாய்ந்தமருது பிரதேசத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடம் பற்றிய தகவல்களை வழங்கிய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மூவருக்கு, தலா 10 இலட்ச ரூபாய் நிதி அன்பளிப்பையும், ஜனாதிபதி வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .