2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

அரசாங்கத்திடம் சஜித் சரமாரி கேள்வி

Freelancer   / 2023 மார்ச் 22 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் எப்போது அமுலாகும் மற்றும் தேர்தல் விவகாரம், கண்ணீர்ப்புகை, வரித் திருத்தம் மூலம் பெற்ற வருமானம் உள்ளிட்ட பல கேள்விகளை பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (21) எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். 

நிலையியற் கட்டளை 27/ 2இல் விசேட கூற்றை முன்வைத்த போதே பல கேள்விகளை எழுப்பினார்.  எனினும், ஒற்றைக் கேள்விக்குக் கூட பதிலளிக்காத அரசாங்கம் கால அவகாசத்தைக் கோரியது..

சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்,

மக்கள் ஆணையை பெறாத தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு முன்வைத்திருக்கும் நிபந்தனைகள் என்ன என்பது குறித்து, சபையில் சமர்ப்பிக்காமல் உள்ளனர் என்றார்.
 
இந்த நிபந்தனைகளை பாராளுமன்றத்துக்கு விரைவாக சமர்ப்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தேசிய முக்கியத்துவம் என கருதி பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன் என்று கேள்விகளை எழுப்பத் தொடங்கினார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாது?. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம், மறுசீரமைப்புக்கு ஆளாகும் அரச நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் யாவை? ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய நிபந்தனைகள் என்ன? அந்த ஒப்பந்தத்தை இவ்வாரம் இந்த சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா? என்ற கேள்விகளை அவர் எழுப்பினார்.
 
சரியான நேரத்தில் தேர்தலை நடத்தாத ஓர் நாட்டை ஜனநாயக நாடு என எவ்வாறு அழைக்க முடியும்? இந்த ஆண்டு தேர்தல் எதனையும் நடத்த அரசாங்கம் திட்டமிடவில்லையா? அவ்வாறு இல்லாவிட்டால், இரண்டாவது தடவையாகவும் திகதி குறிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை நிதியமைச்சு தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்காமைக்கான காரணங்கள் யாது?

அரச அச்சகரால் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் கோரப்பட்ட தொகை எவ்வளவு? அவ்வாறு கோரப்பட்ட தொகையில் எவ்வளவு தொகை இப்போது வழங்கப்பட்டுள்ளது? இன்னும் எவ்வளவு தொகை அரச அச்சகத்திற்கு கொடுக்க வேண்டும்? அந்த தொகையை எப்போது  கொடுக்க முடியுமாக இருக்கும்?

புதிய வருமான வரிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம், கடந்த 2 மாதங்களில் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள வருமானம் எவ்வளவு? கடந்த காலத்தில் தொழில் வல்லுநர்களால் புதிய வருமான வரிச் சட்டத்தில் என்ன திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன? அந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் சம்மதிக்கிறதா?  புதிய வருமான வரிச் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் செய்வதை எதிர்பார்ப்பதாக இருந்தால், அது எந்த முறையில் மேற்கொள்ளப்படும்? என்று வரிகள் குறித்த கேள்விகளையும் முன்வைத்தார்.

கொழும்பு பல்கலைக்கழக வளாகத்துக்குள் பொலிஸார் அண்மையில் நுழைந்து மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில்  கல்வி அமைச்சரால்  கோரப்பட்ட அறிக்கை மற்றும் அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் யாவை?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய இராணுவத் தளபதி அல்லது பொலிஸ் மா அதிபருக்குத் தெரியாது படைகள் பயன்படுத்தும் சீருடைக்கு இணையான சீருடை அணிந்து தடி ஏந்தி இருந்தவர்கள் யார்? குறித்த அறியப்படாத குழுவிற்கு கட்டளை பிறப்பித்தது யார்? இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் யாது? என்று கேள்வியெழுப்பினார்.

கடந்த காலங்களில் போராட்டங்களைக் கலைக்க அரசாங்கம் பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் பலர் உயிரிழந்தனர். இரசாயன விஷ கலவையா இதற்கு காரணம்? அல்லது காலாவதியான கண்ணீர்ப்புகையை பயன்படுத்தியமையா இதற்கு காரணம்?

மேலும் 2022 மே 9 அன்று அலரி மாளிகை அருகிலும் ஜூலை 13 அன்று பிரதமர் அலுவலகத்துக்கு அருகிலும் 2023 பெப்ரவரி 26 லிப்டன் சுற்று வட்டத்துக்கு அருகில் மற்றும், 2023 மார்ச்  7 ஆம் திகதி அன்று கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களைக்  கலைக்க பயன்படுத்தப்பட்ட சிஎஸ் ஷெல்ஸ் மற்றும்  கண்ணீர் புகை குண்டுகளின் உற்பத்தி திகதிகள் மற்றும் காலாவதி திகதிகள் யாவை?

குறித்த போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட சிஎஸ் ஷெல்ஸ் மற்றும்  கண்ணீர் புகை குண்டுகளின் தரத்தை உறுதி செய்ய முறையான ஆய்வக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதா? குறித்த பரிசோதனை அறிக்கையை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா?அவ்வாறு சமர்ப்பிக்க முடியாது என்றால் ஏன் முடியாது? 

மேலும் 15 ஆயிரம் சிஎஸ் ஷெல்ஸ் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதா? இதற்காக மதிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு? என்ற கேள்விகளையும் எழுப்பினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .