2025 ஜூலை 12, சனிக்கிழமை

‘அரசியல் பேசுவதை இராணுவத் தளபதி தவிர்க்க வேண்டும்’

Editorial   / 2019 ஜனவரி 05 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க அரசியல்வாதிகள் போல் பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட-கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என தொடர்ச்சியாக தாங்கள் கூறிவரும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயந்து ஒளிந்திருந்தவர்கள் இப்போது இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென கூறுவதாக, இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க கூறுகிறார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என வினவியபோதே. அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க, தொடக்கத்தில் வந்த போது, இராணுவம் பற்றிய உள்நாட்டு வெளிநாட்டு மக்களின் கருத்து மிக மோசமாக அமைந்துள்ளது என்றும் அதனை மாற்றத் தான் நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறே அவர் செய்தார். கீரிமலைக்குப் போகும் வழியில் நல்லிணக்கபுரத்தைக் கட்டிக் கொடுத்தார். இவ்வாறு பல காரணிகளால் இராணுவம் பற்றிய மக்களின் கருத்துகளை மாற்ற எத்தனித்தார். அரசாங்கத்துக்கு அவர் செய்ய வேண்டிய கடமைகளை அவர் கச்சிதமாகச் செய்து கொண்டு போகின்றார்.  ஆனால், அவர் அரசியல்வாதிகள் போல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அவர் அரசாங்கத்தின் ஓர் அலுவலர் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் கூறுவனவற்றை செய்ய வேண்டிய கடப்பாடு உடையவர். 'பயந்து ஒளிந்தவர்கள்' என்று என்னைத் தான் குறிப்பிட்டிருந்தால் தான் 1987இல் இருந்து தொடர்ச்சியாக தெற்கிலேயே இருந்தவனெனத் தெரிவித்த அவர், 1983இல் மல்லாகத்தில் இராணுவம் செய்த அட்டகாசங்களால் ஏற்பட்ட மரணங்கள் பற்றிய மரண விசாரணைகளை வேறெவரும் செய்ய முன்வராத நிலையில் தானே செய்தவனெனெவும் குறிப்பிட்டார்.

ஆகவே, பயந்து ஒழிய வேண்டிய காரணங்கள் எவையும் தமக்கிருக்கவில்லையெனவும் மக்கள் பயந்து ஒளிந்தது இராணுவத்திற்கே ஆகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

“1960களில் வந்த இராணுவத்தின் நிமித்தம் மக்கள் பயந்தனர். பொலிஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியம்பிள்ளை காரணமாக இளைஞர் யுவதிகள் பயந்தொளிந்தனர். போரின் போது கண்மூடித்தனமாய் விடுத்த குண்டு வீச்சுக்களால் மக்கள் ஓடி ஒளிந்தனர். திடீரென்று வந்து மக்களபிமான வேலைகளைச் செய்வதால் இராணுவம் முற்றிலும் மாறிவிட்டது என்று அர்த்தமுமில்லை, இராணுவம் பிழையேதும் எத்தருணத்திலும் செய்யவில்லை என்றும் அர்த்தமில்லை.

“நான் 2013ஆம் ஆண்டில் இருந்து இராணுவத்தை வெளியேறச் சொல்லி வருகின்றேன். இராணுவம் தான் பொம்மைகளையும் பொருட்களையும் தந்து இங்கு தரித்து நிற்கப் பார்க்கின்றார்கள். பொய்யாக வழக்குகளைப் புனைந்து புலிகள் வந்து விட்டார்கள என்று பூச்சாண்டி காட்டி இங்கு தரித்து நிற்கப் பார்க்கின்றார்கள்” என்றார்.

“வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றால் அது அவர்கள் கடமை. அதையும் செய்யாது விட்டால், வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் போய் அரசாங்கம் எதைக் கூறப் போகின்றார்கள்” என அவர் கேள்வியெழுப்பினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .