2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இந்தியாவிலிருந்து மின்சாரம் கொள்வனவு: கடலுக்கடியாக கொண்டுவரத் திட்டம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலுக்கடியிலான மின்வட (கேபிள்) திட்டத்தின் ஊடாக, இலங்கைக்கு மின்சார விநியோகத்தை வழங்க, இந்தியா தயாராக இருக்கின்றதென, அந்நாட்டு மின்சக்தி அமைச்சின் செயலாளர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டுத் தேவையை ஈடுசெய்யும் முகமாக , 500 மெகாவொட் மின்சாரத்தை இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மின்சார இணைப்பு வசதிகள்

இல்லாமையால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது துணை - கடல் சக்தி இணைப்பு தொழிநுட்பத்தை பயன்படுத்துவது குறித்து, இந்திய மின்சக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட இந்தியாவின் மின்சக்தி அமைச்சின் செயலாளர் பி.கே.புஜாரி,

“தற்போது நாம் பங்களாதேஷ், நேபாளம், மியான்மார், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்கிறோம். கடலுக்கடியிலான மின் இணைப்புக் கட்டமைப்பின் மூலம், இலங்கைக்கும் மின்சார விநியோகத்தை மேற்கொள்வது குறித்து தற்போது ஆலோசிக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இன்னமும் இதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் நாம், துணை - கடல் இணைப்புத் தொடர்பான புதிய தொழிநுட்பத்தை கண்டறிந்துள்ளோம். இலங்கைக்கு மின்சார விநியோகம் செய்வது குறித்து, முன்னர் இந்தியா ஆலோசனை நடத்தியது.

ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தத் திட்டம் சாத்தியமானதாக இருக்கவில்லை என்பதே அதற்குக் காரணம். அப்போது நல்ல தொழிநுட்பம் இருக்கவில்லை. அது செலவுமிக்கதாகவும் இருந்தது. இப்போது தொழிநுட்பம் பெருமளவில் உயர்ந்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க சக்தியை இறக்குமதி செய்வதற்கு, ஐரோப்பிய நாடுகள் இந்தத் தொழிநுட்பத்தை பயன்படுத்துகின்றன. எனவே, இலங்கைக்காக இதனை நாம் மீளப் பரிசீலிக்கிறோம். கடலுக்கடியில் மின் இணைப்புக் கட்டமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமா என்று ஆராய்கிறோம். இது நல்ல தொழிநுட்பம் மாத்திரமன்றி, செலவும் குறைவானது” என்று, அவர் மேலும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .