2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Editorial   / 2026 மார்ச் 13 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (12) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இது வெறும் கல்வி உதவித்தொகை மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு நீண்டகால மனிதவள முதலீடு என வலியுறுத்தினார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • பாரிய முதலீடு: இச்செயற்திட்டத்திற்காக அரசாங்கம் 4,001 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
  • நிதி ஒதுக்கீடு: தெரிவு செய்யப்படும் ஒரு மாணவருக்கு நான்கு ஆண்டு காலப் படிப்பிற்காக மொத்தம் 80 மில்லியன் ரூபாய் (8 கோடி) செலவிடப்படும்.
  • பல்கலைக்கழகத் தரம்: உலகத் தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களில் மட்டுமே மாணவர்கள் பயில முடியும்.
  • இலக்கு: 2025 முதல் 2033 வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 200 மாணவர்களுக்கு இவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக 32 மாணவர்கள் தெரிவு

2025/26 கல்வியாண்டிற்காக ஏற்கனவே 32 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 9 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், மொனாஷ் மற்றும் நியூசிலாந்தின் ஓக்லண்ட் போன்ற உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் தமது கல்வியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

பிரதமரின் அறிவுரை

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,

"சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகள் மனிதவளத்தில் முதலீடு செய்தே இன்று உலக அரங்கில் முன்னேறியுள்ளன. அதே பாதையை நாமும் பின்பற்ற வேண்டும். வெளிநாடு செல்லும் மாணவர்கள் வெறும் பட்டதாரிகளாக மட்டும் திரும்பி வராமல், சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய சிந்தனையாளர்களாக உருவாக வேண்டும்."

மேலும், மாணவர்கள் வெளிநாடுகளில் எதிர்கொள்ளும் காலநிலை மாற்றங்கள் மற்றும் கலாசார சவால்களைத் தனது ஆளுமையை வளர்க்கும் வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களுக்கு ஏதேனும் நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில் தூதரகங்கள் ஊடாகத் தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .