2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையிலும் ’கடாபி ஆட்சி உருவாகும்’

Editorial   / 2020 ஜூன் 10 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஆளுங்கட்சி உறுப்பினர்கள், வேட்பாளர் இலக்கங்கள் வெளியாவதற்கு முன்னரே தங்களது வேட்பாளர் இலக்கங்களைப் பகிரங்கப்படுத்தியதாகக் குற்றச்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சுஜீவ சேனசிங்க, இந்த நிலைமை நீடித்தால், இலங்கையிலும் கடாபி ஆட்சியே உருவாகும் என எச்சரித்தார்.

வேட்பாளர் இலக்கங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு முன்னரே, ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மேற்படிச் செயற்பாடுகளில் ஈடுபட்டமை கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கம் தொடர்பான செயற்பாடுகளை, முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தன்னிடத்தில் ஒப்படைத்து உள்ளாரென்றும் அதற்கமைய, தன்னிடம் அனுமதி கோரிய பின்பே அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சிறிகொத்தாவுக்குச் சென்றனர் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, தாங்கள் தற்போது வரையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களாகவே இருப்பதாகவும் அக்கட்சியின் வளங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, ஐக்கிய தேசிய கட்சியும் செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட ஏகமனதான தீர்மானத்துக்கு அமையவே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

மேலும், ஆளும் தரப்பின் உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்டோர், வேட்பாளர் இலக்கங்களைப் பகிரங்கமாகக் கூறியிருந்தார்கள் என்று சாடிய சுஜீவ சேனசிங்க, அந்த இலக்கங்கள் சரியாக இருக்குமாயின், அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மாறாக, இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்தால், இலங்கையிலும் கடாபி, சதாம் உசேன் போன்றோரின் ஆட்சியே உருவாகும் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .