2025 ஜூன் 19, வியாழக்கிழமை

இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளருக்கு உள்ள தகமைகள் என்ன?

Editorial   / 2020 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பா.நிரோஸ்

இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளராக நியமனம் பெறுவதற்கு, என்ன தகமை இருக்க வேண்டுமென, எதிர்கட்சியினர், அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினர்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, “கடந்த அரசாங்கத்தில், பட்டதாரிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால், அவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கானப் பிரசார நடவடிக்கைகளில ஈடுபட்டிருக்க வேண்டும். பட்டதாரிகள் வைத்திருக்கும் பட்டங்களைவிட, சஜித்தின் பிரசாரங்களில் கலந்துகொள்வதே அவர்களுக்கு அரச நியமனங்களைப் பெற்றுக்கொள்வதற்கான தகமையாக இருந்தது” என்றார்.

ஆனால், தற்போதைய அரசாங்கம், நியாயமான முறையில் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

இதுன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்கார, “இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளராக நியமனம் பெறவதற்கு என்ன தகமை இருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

எனினும், இதற்கு முறையானப் பதில்களை வழங்காத இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, “நான் கூறும் விடயங்களை, இவர்களால் கேட்டுக்கொண்டு இருக்க முடியவில்லை. உயரம் என்றால் பாதுகாவலர், உயரம் குறைவு என்றால் தொழிலாளர் என்றே, கடந்த அரசாங்கம் நியமனங்களை வழங்கியது” என, அவர் கிண்டலாகச் சொன்னார்.

“வேலையற்ற பட்டதாரிகள், தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்காக வீதிகளில் இறங்கிப் போராடிய போது, அவர்களைத் தாக்கி சிரித்தவர்களே இன்று எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள். ஆனால் புதிய அரசாங்கம், 61 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு, அரச நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது, இனிவரும் இரண்டு மாதங்களுக்குள், மேலும் ஒரு இலட்சம் பேருக்கு அரச நியமனங்கள் வழங்கப்படும்” எனவும் கூறினார்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் மாத்திரமே தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .