2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

’உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி இல்லை’

Freelancer   / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்று நேற்றுடன் 7ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், ஈஸ்டர் தாக்குதல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு கருவியாக மாத்திரமே பயன்படுத்தப்பட்டதே தவிர, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தேர்தலுக்கு முன்னர் கடுவாபிட்டிய தேவாலயத்திற்குச் சென்று இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்த போதிலும், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அரசாங்கத்திடம் போதிய வளங்கள் இருந்தும் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், ஈஸ்டர் தாக்குதலை அரசியல் மேடைப் பொருளாக மாற்றாமல் பாதிக்கபபட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அத்தோடு, எதிர்வரும் மே தினக் கூட்டத்தை மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இம்முறை பேரணிகள் எவையும் நடத்தப்படமாட்டா  என்றும் குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான உழைக்கும் மக்கள் வாக்களித்த போதிலும், அவர்களின் சம்பள உயர்வு, பதவியுயர்வு மற்றும் வாழ்வாதார உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது.

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு பலமான போராட்டத்தை முன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .