2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உலகின் நம்பிக்கையை வென்றவர் மைத்திரி: மூன் புகழாரம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றி கொண்டுள்ளார் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் எதிர்கால வெற்றிப் பயணத்துக்கு சர்வதேசத்தின் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 70ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஐ.நா. தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை (26) சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இச்சந்திப்பின் போது கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம், இம்முறை ஐ.நா. சபைக் கூட்டத்தின் தொனிப்பொருள் நிலையான அபிவிருத்தி என்பதாகும். முழு உலகமே இதைத்தான் எதிர்பார்த்துள்ளது. ஐ.நா. சபை 17 கோட்பாடுகளை முதன்மைப்படுத்தி அதனை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது என்றார். 

அத்தோடு, இத்திட்டத்தை இலங்கையில் வெற்றிகரமாக்க பங்களிப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு பங்களிப்புச் செய்த ஜனாதிபதிக்கு தனது நன்றிகளையும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல்களை சுமுகமாக நடத்துவதற்கு ஆதரவு வழங்கிய ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பாகத் தனது வரவேற்பை வெளியிட்ட செயலாளர் நாயகம், திட்டமிடப்பட்ட அரசியல் வேலைத்திட்டம் ஊடாக இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்றும் அதற்குப் பூரண ஆதரவை வழங்கத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X