2025 மே 12, திங்கட்கிழமை

’’ஊகங்களைத் தவிர்க்கவும்’’: இந்திய விமானப்படை

Editorial   / 2025 மே 11 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும் இந்திய விமானப்படை ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "ஆபரேஷன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை இந்திய விமானப்படை (IAF) துல்லியத்துடனும் தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

தேசிய நோக்கங்களுடன் இணைந்து, விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை வழங்கப்படும். ஊகங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைவரையும் இந்திய விமானப்படை கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 4 நாட்களாக ட்ரோன் தாக்குதல், ஏவுகணை தாக்குதல், குண்டு வீச்சு போன்றவற்றை ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் எதிர்கொண்டன. பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல் முயற்சியை இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் மூலம் இடைமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இரவு நேரங்களில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் மேற்கொண்டது. அதை சமாளிக்க சனிக்கிழமை (10) இரவும் இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (11)  காலை முதலே எந்தவித தாக்குதலும் இந்திய எல்லையில் நடைபெறவில்லை என தகவல் கிடைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், உதம்பூர், சம்பா, ரஜோரி, ஜம்மு, உரி, அக்னூர், ஸ்ரீநகர், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், பதன்கோட், பெரோஸ்பூர் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு படை எதிர் தரப்பின் நடவடிக்கையை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் திகதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, அட்டாரி - வாகா எல்லை மூடல்,விசாக்களை ரத்து செய்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது என பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைளை இந்தியா மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை இந்தியா முடுக்கி விட்டது. பஹல்காம் தாக்குதல் பல பெண்களின் குங்குமம் அழிய காரணமாக இருந்ததால், அதை நினைவுகூரும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. பாகிஸ்தானுக்குள் 9 இடங்களில் செயல்பட்டு வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றின் கட்டமைப்புகளை இந்திய ராணுவம் தகர்த்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியது. எல்லை பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. எனினும், இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70 பீரங்கி, சில்கா பீரங்கி, எஸ்-400 (சுதர்சன சக்கரம்) உள்ளிட்டவற்றால் கடுமையாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் வீசிய ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்தது.

அணு ஆயுத நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது உலக நாடுகளை கவலையடைய செய்தது. கடந்த 4 நாட்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா - பாகிஸ்தான் இடையே சனிக்கிழமை (10) போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை (10) மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால், போர் நிறுத்தம் சனிக்கிழமை (10)  மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சோரா உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுக்க இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு முழு அனுமதி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X