ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் புதன்கிழமை (25) அன்று திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.
அவ்வேளை யூபிலிமண்டபத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.மண்டபத்திற்கு ஆணையாளர் வருகைதந்த போது வெளியில் கூடியிருந்த பல்வேறு அமைப்புகளின் மக்களையும் அவர்சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.அந்த மனுக்களில்
ஐ.நா.மனித உரிமையாளரிடம் திருகோணமலையில் வைத்து கையளிக்கப்பட்ட கோரிக்கை மனு
மாண்புமிகு மனித உரிமை ஆணையர்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை,
ஐ.நா. ஜெனீவா.
மாண்புமிகு மனித உரிமை ஆணையர்.
நாங்கள், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை) வாழும் தமிழ் பேசும் மக்கள், மாண்புமிகு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரை வரவேற்க வந்துள்ளோம்.
இங்கு 'நாங்கள்' யாரென்றால்: (1) கிழக்கின் இராணுவமயமாக்கப்பட்டுள்ள அரச எந்திரத்தின் மிருகத்தனத்தின் கீழ் வாழ்ந்து வரும் தமிழர்கள்; (அரசு கூட, பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவித்தது), (2) அரசு புரிந்த பன்னாட்டுக் குற்றங்களிலிருந்துதப்பிப் பிழைத்த உயிருள்ள சாட்சிகள், (3) வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்ட மக்களின் உறவினர்கள், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், குமுகாய மன்றங்களின் உறுப்பினர்கள், பெண்கள் வலையமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் 'நாங்கள்' என்பதில் முப்படைகள், அரச திணைக்களங்களான தொல்பொருள் துறை, வனவிலங்குகள், கடலோர பாதுகாப்பு, வனத்துறைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்பட்டுள்ள தங்களின் தாய்நிலத்திற்காகப் போராடும் மக்கள், தெற்கிலிருந்து வந்த மீனவர்களால் கடற்படை மற்றும் மீன்வளத் துறையின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ள தங்களின் மூதாதையர் மீன்பிடித்த தளங்களை மீட்டெடுக்கப் போராடும் தமிழர்கள் அடங்குவர்,
இறுதியாக 'நாங்கள்' என்பது ஐ.நா. மீது, குறிப்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள், இடைக்கால நீதி,மற்றும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கான நம்பிக்கையாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைஐ மட்டுமே நம்பி இருக்கும் தமிழ் பேசும் மக்கள்.
ஐயா, உங்களை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் இயல்பு நிலையை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுவதோடு, உங்கள் அன்பான பரிசீலனைக்கு முக்கிய விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
1. 1833 இல் பிரித்தானியரால் தமிழரின் தாயகம் (வடக்கு கிழக்கு) மற்ற பகுதிகளுடன் இணைக்கப்பட்ட போது, தமிழர்கள் தங்களின் சுயநிர்ணய உரிமை, தேசியத்தன்மை மற்றும் தாயக உரிமையை இழந்தனர். முதலாவது இலங்கை அரசு தொடங்கி இன்றுவரை ஆட்சிக்கு வந்துள்ள அனைத்து அரசுகளும் இந்த உரிமைகளை ஒடுக்கியுள்ளன. 1983 இல் “கருப்பு யூலை” கலவரங்களை பரிசீலித்த International Commission of Jurists (ICJ), “இவை தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்புச் செயல்கள்” என அறிவித்தது. இத்தகைய தமிழர் அழிப்புத் திட்டங்கள் 2009 மே மாதத்தில் உச்சத்தை எட்டின.
2. 2009இற்குப் பிற்பகுதியில் இருந்து இன்று வரை, தமிழர்களிற்கெதிரான தொடரும் இன அழிப்பு (Constructive Genocide) எமது இருப்பை அழிக்கும் நிகழ்ச்சிநிரலில் இயங்குகிறது. அரசின் அரசியல் மற்றும் இராணுவ அமைப்புகள் தேசிய கொள்கைகளைத் திரித்துக் கொண்டு அவை தமிழர்களுக்கு எதிரானவையாகச் செயற்படுகின்றன. இது பன்னாட்டு சமூகத்தால் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.
3. தமிழர்கள் மீது இடம்பெற்ற பன்னாட்டுக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் இந்நாட்டில் தொடங்கப்படவில்லையே தவிர, னைத் தாமதப்படுத்த உச்ச அளவிலான இராசதந்திரத்தை அரசு பயன்படுத்துகிறது. அதேவேளை, மனித உரிமை செயற்பாட்டாளர்களை கொடுமைப்படுததுதலையும், விசாரணைகளை மேற்கொள்வதையும் தொடர்வதுடன் அவர்களை எப்போதும் கண்காணிக்கப்படுபவர்களாக வைத்திருக்க அரசு முயல்கிறது.
4. OSLAP (OHCHR on Sri Lanka Accountability Project) உறுப்பினர்களுக்கே இலங்கைக்கு வருவதற்கு விசா மறுக்கப்படுகின்றது. இது நீதிக்கான அரசின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் துல்லியமான சான்றாக இருக்கின்றது.
5. தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான நிலங்களில், அரச ஆதரவுடன் காலனித்துவக் குடியேற்றம் (settler colonisation) தொடர்கின்றது. மிகச்சமீபத்திய உதாரணமாக மட்டக்களப்பின் மயிலாத்தமடு பகுதியில், தமிழர்கள் பண்டைய காலம் முதல் பயன்படுத்திவரும் மேய்ச்சல் நிலம், சிங்கள குடியேற்றக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். நீதிமன்றம் அவர்களை அகற்ற உத்தரவு வழங்கினும், காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது. மாறாக, குடியேற்றக்காரர்கள் கட்டிடங்கள் அமைக்க, அரசாங்கம் கட்டுமான வசதிகளை வழங்குகின்றது.
மேலுள்ள அம்சங்களின் மூலம், ஐயா, நீங்கள் தரவுகளில் காணப்படும் விஷயங்களுக்கும் உண்மை நிலைமைகளுக்கும் இடையேஉள்ள வேறுபாடுகளை உணரலாம்.
எனவே, நாங்கள் பணிவுடன், உங்கள் கனிவான கவனத்திற்கு கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்:
1. தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட, பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பன்னாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.
2. செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பன்னாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுமதிக்கவேண்டும்.
3. தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பு குற்றங்களுக்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ICC) பரிந்துரை செய்யவேண்டும்.
4. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்களில் இடம்பெறும் நில பறிப்புகளை உடன் நிறுத்தி, உரிமையாளர்களுக்கு நிலங்களை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். இவை அரச அனுசரணையுடன் நடத்தப்படும் சிங்களமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
6. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி தேடி, அவர்கள் இன்னும் உயிருடன் உள்ளார்களா? என்ன நிகழ்ந்தது? என்பதற்கான பதில்களை உடன் வழங்க வேண்டும்.
7. 1948 முதல் தொடரும் வன்முறை மற்றும் தமிழர் இன அழிப்பின் முழுமையான அடித்தள அறிக்கையை OSLAP வெளியிட வேண்டுமென வலியுறுத்தவேண்டும்.
8. பயங்கர வாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் (PTA & Online Safety Act) இரத்து செய்ய இலங்கை அரசை அழுத்த வேண்டுகிறோம்.
9.செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், SL அரசும் பன்னாட்டு அமைப்புகளும் இணைந்து செயல்படும் ஒரு கலப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்க பரிந்துரை செய்ய வேண்டும்.
தங்களுக்கு நன்றி
நாங்கள்
பாதிக்கப்பட்டவர்கள்,வடக்கு கிழக்கு சமூக இயக்கம்,வலிந்து காணாமல் ஆக்கப் பட்ட உறவுகளின் சங்கம், சிவில் அமைப்புக்கள், பெண்கள் வலையமைப்புக்கள், மனித உரிமை செயற் பாட்டாளர்கள்.
கிழக்கு மாகாணம், இலங்கை.
எஸ்.கீதபொன்கலன்





