2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கலாசாரம் பேணும் குழுவுடன் இணையுமாறு அழைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 08 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

தமிழ் மக்கள் பேரவையானது தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணியை வலுவாக முன்னெடுக்கவுள்ளது. இக்குழுவில் கலை, கலாசாரத்துடன் சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்களை இணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுக்கின்றது.

இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையானது, கடந்த 2ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தயாரிக்கும் நிபுணர்களடங்கிய உபகுழுவின் செயற்பாட்டை ஆரம்பித்துவைத்தது. அந்த உபகுழுவின் பணி வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் சமநேரத்தில்  கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் உயரிய நோக்குடன் துறைசார் வல்லுநர்களடங்கிய உபகுழுவை அமைக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இக்குழுவிற்கு அனைவரையும் ஒன்றுசேருமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஓர் இனத்தின் எதிர்கால வளமும் வாழ்வியலும் தனித்து அரசியல் உரிமைகளால் மட்டும் தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை. மாறாக அந்த இனத்தின் மரபுரிமைகளும் கலை, கலாசாரப் பண்பாட்டு அடையாளங்களும் கட்டிக்காக்கப்படுவதிலும் தங்கியுள்ளதென்ற உண்மையை நாம் ஒருபோதும் மறந்துவிடலாகாது. இன்றைய சமகால சூழ்நிலையில் எங்கள் இளம் சமூகத்தை வழிப்படுத்துவதில் ஓர் ஆரோக்கியமான நிலைமை இருப்பதாகத் தெரியவில்லை. எச்சந்தர்ப்பத்திலும் எங்கள் இளைஞர்கள் தடம் மாறிப் பயணிக்கக்கூடிய மிக மோசமான சூழ்நிலை காணப்படுகின்றது. எனவே, இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டி எங்கள் இளம் சமூகத்தினை ஆற்றுப்படுத்துவதன் தேவைக்காக, எங்கள் பண்பாட்டு அடித்தளங்களைக் கட்டியெழுப்புவதும் காப்பாற்றுவதும் நடைமுறைக்குச் சாத்தியமாக்குவதும் காலத்தின் கட்டாய தேவையாகும்.

இவ்வகையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலை, கலாசாரத்தைப் பாதுகாக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. கலைத்துவப் படைப்புகளும் அதற்கான சந்தர்ப்பங்களும் எங்கள் இளம் சமூகத்தை நிச்சயம் வழிப்படுத்தும் என்பதனைக் கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் கலை, கலாசாரப் பணிக்கு தமிழ் மக்களாகிய உங்களிடமிருந்து தகுந்த ஆலோசனைகளையும் ஆதரவினையும் வேண்டிநிற்கின்றோம்.

இதற்காக நீங்கள் 0756993212; அல்லது 0710145723 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது kalaachchaaram@tamilpeoplescouncil.org   என்ற மின்னஞ்சல் மூலமாகவோ எம்முடன் தொடர்புகொள்ள முடியும். எங்கள் மாணவர்களை - இளைஞர்களை நல்வழிப்படுத்துவதன் மூலம் தமிழினம் கல்வி, பொருளாதாரம், சமூக உறவு என்ற பல்பரிமாணங்களில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்க முடியும். இந்நம்பிக்கையை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து கலை, கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் தமிழ் மக்கள் பேரவையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். எங்கள் கலாசாரத்தின், பண்பாட்டின் கட்டுமானங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்படுமாயின் எங்கள் இளம் சமூகத்தினை நல்வழிப்படுத்துவதென்பது மிக எளிமையான விடயம் என்ற அசையாத நம்பிக்கையோடு உங்கள் அனைவரதும் ஆதரவினைத் தமிழ் மக்கள் பேரவை இவ்விடத்தில் வேண்டிநிற்கின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X