2026 மார்ச் 12, வியாழக்கிழமை

கேஸ் சிலிண்டர் தகராறு: அடுத்தவர் வீட்டுப் பருப்பை உப்பில்லாமல் தின்ற பெண்

Editorial   / 2026 மார்ச் 12 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிலங்கையின் ஒரு நகரில் கேஸ் (எரிவாயு) வரிசையில் நின்ற பெண்ணொருவருக்கு, எதிர்பாராத விதமாக அடுத்தவர் வீட்டுப் பிரச்சினையில் சிக்கி "உப்பில்லாத பருப்பு" சாப்பிட நேர்ந்த விசித்திரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

வீட்டில் விறகு அடுப்பில் சமைத்து அலுத்துப்போன மனைவி, எப்படியாவது ஒரு சிலிண்டரை வாங்கி வருமாறு கணவனை நச்சரித்து அனுப்பினார். கணவனும் வாடகை ஓட்டோவில் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு வரிசையில் போய் நின்றார்.

லொறி வர நேரமாகும் என்பதால், சும்மா இருக்க முடியாமல் தனக்கு அருகில் நின்ற ஒரு அழகான பெண்ணுடன் அரட்டையை ஆரம்பித்தார். பேச்சு கேஸ் தட்டுப்பாட்டில் தொடங்கி, ஈரான் - அமெரிக்கா போர் வரை நீண்டது. இந்த யுத்தத்தால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து இருவரும் பயங்கரமான தர்க்கங்களில் ஈடுபட்டனர். கால் கடுக்க நின்ற அவர்களுக்கு அலுப்புத் தட்டவே, அருகருகே இருந்த காலி சிலிண்டர்கள் மீது அமர்ந்துகொண்டு பேச்சைத் தொடர்ந்தனர். பார்ப்பதற்கு அவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள் போல நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

நேரம் ஆகியும் கணவன் வராததால் சந்தேகமடைந்த மனைவி, "ஒருவேளை சிலிண்டரை யாராவது திருடிக்கொண்டு போயிருப்பார்களோ?" என்ற பயத்தில் வரிசை இருக்கும் இடத்திற்கு ஓடிவந்தார். அங்கே கண்ட காட்சி அவரை அதிர வைத்தது!

தன்னுடைய கணவன், யாரோ ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக அமர்ந்து, பல்லைக்காட்டிச் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டதும் அவருக்குப் பொறி கலங்கியது. கட்டுக்கடங்காத ஆத்திரத்தில் அந்தப் பெண்ணின் மீது பாய்ந்தார்.

"வெட்கமில்லையா உனக்கு? அடுத்தவன் புருஷனோட இப்படி ஊர் மேயுறயே!" என்று ஊரே கேட்கும் படி கத்தத் தொடங்கினார். வானத்திலிருந்து ஏதோ இடி விழுந்தது போல அந்தப் பெண் திகைத்துப் போய் நின்றார்.

மனைவியின் இந்த 'ருத்ரதாண்டவத்தை' பார்த்த கணவன் மெதுவாக நழுவி ஓரமாகச் சென்றார். இடையில் புகுந்து சமாதானம் செய்யப் போனால், ஊர் முன்னிலையில் தனக்கும் அடி விழும் என்பது அவருக்குத் தெரியும்.

வரிசையில் நின்ற மற்றவர்களுக்கு இது ஒரு இலவச பொழுதுபோக்காக அமைந்தது. சிலர் விசிலடித்தனர், சிலர் கைதட்டிச் சிரித்தனர். நிலைமை கையை மீறிப் போவதைக் கண்ட கேஸ் கடைக்காரர் வந்து இருவரையும் கடுமையாக எச்சரித்தார். 

கடைசியில் என்ன நடந்தது? தன் மானத்தைக் காக்க நினைத்த கணவன் எஸ்கேப் ஆகிவிட, வம்புக்குப் போன மனைவி இப்போது காலி சிலிண்டருடன் வரிசையில் நிற்கிறார். பாவம் அந்த அந்நியப் பெண்... தெரியாத நபருடன் உலக அரசியல் பேசப் போய், இப்போது முகம் சிவக்க, அவமானத்துடன் வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .