2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சஜித்தின் ஆட்சியில் மலையகத்துக்கு மறுமலர்ச்சி

Editorial   / 2019 ஒக்டோபர் 04 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கவிதா சுப்ரமணியம் 

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியைத் தொடர்ந்து அமையவுள்ள ஆட்சியில், மலையக மக்களின் வாழ்க்கைக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தக்கூடிய பல திட்டங்களை, தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் முன்வைத்திருந்த நிலையில், அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவதாக, சஜித் உறுதியளித்துள்ளார். 

அத்துடன், கூட்டணி முன்வைத்த 6 முக்கிய விடயங்களைத் தாண்டியும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கவும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இணங்கியுள்ளாரென்று தெரிவிக்கப்படுகின்றது. 

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சி என்ற வகையில், ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்ட பின்னர், அவருக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினருக்கும் இடையேயான முதலாவது சந்திப்பு, நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றது. 

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்கெனவே தீர்மானித்திருந்த நிலையிலேயே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. 
இந்தச் சந்திப்பின்போது, விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட வேண்டிய சில விடயங்களையும் அதற்கு அப்பால் உள்ள சில கோரிக்கைளையும் முன்வைத்து, கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது. 

இதன்போது, விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கியமான 6 விடயங்கள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அதையும் தாண்டி, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டனவென்றும் தெரியவருகின்றது. 

தேசிய காணிக் கொள்கைக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் திட்டங்களில், இந்திய வம்சாவளி மலையக மக்களும் மலையகக் கிராமங்கள், தோட்டங்களை அண்டியிருக்கக் கூடியவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளது. 

கல்வி தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் போது, நுவரெலியா மாவட்டத்தை மய்யப்படுத்தி பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதும் மலையகத்தில் தேசியப் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும் என்பதும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

பெருந்தோட்டங்கள் தொடர்பாகத் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சிறுதோட்ட முகாமைத்துவ முறையை அல்லது சிறுதோட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, பெருந்தோட்டத்துறை மீள்கட்டமைப்புச் செய்யப்படல் வேண்டும். 

இதனூடாக, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வருமானத்தைப் பெறுவதற்கான வழிகள் இணங்காணப்பட்டு, அவர்களின் தொழில்நிலை மேம்பட்டு, கூலித்தொழில் செய்பவர்கள், வருமானம் பெறும் ஒரு சமூகமாக மாற்றப்படல் வேண்டும் என்றும் இதன்போது கோரப்பட்டுள்ளது. 

அத்துடன், மொழி உரிமை, தற்போது உள்ளதைவிட மிகச் சீரான முறையில், நாடு முழுவதும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தல், சகல அரச ஸ்தாபனங்களிலும் பெயரளவில் அல்லாமல் செயலளவில் தமிழ் மொழியில் சகல விடயங்களையும் செய்யக்கூடிய ஒரு நிலைமை ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதென்றும் தெரியவருகின்றது. 

இந்தக் கலந்துரையாடல் குறித்துக் கருத்துத் தெரிவித்த, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டணியின் உறுப்பினருமான வேலுகுமார், இந்தக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை, வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, முழுமையாக ஏற்றுக்கொண்டார் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய கோரிக்கைகளைத் தவிர, அதற்கு அப்பால் மலையகம் தொடர்பானப் பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார். 

குறிப்பாக, பெருந்தோட்டத் துறைக்குள் உள்ள சுகாதாரத்துறை தேசிய மயமாக்கப்பட்டு, அதைச் சுகாதார அமைச்சு பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகளை, அரச ஸ்தாபனங்கள் பொறுப்பேற்று, அவற்றினுடான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுத்தப்படல் வேண்டும் என்றும், இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன என்றார்.  
இதுவரை வந்த தலைவர்களைக் காட்டிலும், மிகுந்த நம்பிக்கையோடு அமைச்சர் சஜித்துடன் பயணம் செய்யலாம் என்ற உறுதி வழங்கப்பட்டதென்றும், அவர் மேலும் கூறினார். 

இந்தச் சந்திப்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன், பிரதித் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், பிரதித் தலைவரும் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.அரவிந்தகுமார், வேலு குமார், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் செயலாளர் நாயகம் சந்திரா ஸாப்ட்டர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .