2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சைரன் ஒலியெழுப்பி, மின்சாரத்தை துண்டித்து நாளை போர்க்கால ஒத்திகை

Editorial   / 2025 மே 06 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 22-ம் திகதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் நாடு முழுவதும் நாளை (07) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

போர்க்காலங்களின்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்ப வேண்டும். பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். சைரன் ஒலியின்போது அந்த இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்வது குறித்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.

போர்க்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும். குறிப்பாக போரில் காயமடைந்தவர்களை மீட்பது, எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பத்திரமாக பாதுகாப்பது குறித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

இரவில் மின்சாரத்தை துண்டித்து வெளியே தெரியாத வகையில் அகல்விளக்கு ஒளியில் அன்றாட பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிப்போர் போர்க்காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சிற்பபு பயிற்சி வழங்க வேண்டும்.

எதிரிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவது, பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் பாதுகாப்பாக தங்கியிருப்பது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதாள பதுங்கு அறைகளை ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ளனர். ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும் வாங்கி வைத்திருக்கின்றனர்.

இதேபோல பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் எல்லையோர கிராமங்களிலும் போர்க்கால ஒத்திகை தொடங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாபின் பெரோஸ்பூர் பகுதியை ஒட்டிய கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி வீடுகளில் மின் விளக்குகளை ஒளிரச் செய்யக்கூடாது. வாகனங்களின் முகப்பு விளக்குகளைகூட ஒளிரச் செய்யக்கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தினர். இதை எல்லையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த கண்டிப்புடன் பின்பற்றினர்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டில் போர் நடைபெற்றது. அப்போது நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகைகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் திங்கட்கிழமை (05) அவசரமாக கூடியது. அமெரிக்காவின் நியோர்க் நகரிலுள்ள ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் கட்டிடத்தில் இந்தக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பினர் பஹல்காமில் நடத்திய தாக்குதல் குறித்து இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி கடும் கண்டனத்தை பதிவு செய்ததாகத் தெரிகிறது.

அதேபோல், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் சார்பிலும் புகார் பதிவு செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷ்யா சமரச முயற்சி: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ் சில நாட்களுக்கு முன்பு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் தொலைபேசியில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா பாகிஸ்தான் நாடுகள் விரும்பினால் ரஷ்யா சமரசத்தில் ஈடுபட தயாராக இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X