2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சர்வஜன வாக்கெடுப்பு ‘20க்கு அவசியம் இல்லை’

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லையெனத் தெரிவித்துள்ள சட்டமா அதிபர் தப்புல டி ​லிவேரா, நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றிக்கொள்ள முடியுமென, நீதியமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள், 20ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்படவேண்டியவை தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று (02) மாலை கூடிய, வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக, நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டியதில்லையென, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளாரென சட்டமா அதிபர் திணைக்கள தொடர்பாடல் அதிகாரி சொலிஸிட்டர் ஜெனரல் நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

“அந்தச் சட்டமூலத்தில், அரசமைப்பின் 83ஆம் பிரிவுக்கு அமைவான, சர்வஜன வாக்கெடுப்புக்கு உரிய எவ்விதமான விடயதானங்களும் இல்லை. ஆகையால், அரசமைப்பின் 82ஆம் பிரிவின் பிரகாரம், நாடாளுமன்றத்தில் பிரசன்னமாய் இருக்கும் முழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றிக்கொள்ள முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர், நடத்தப்பட்ட முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தைத் திருத்துவதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டது. அத்துடன், 20ஆவது திருத்தச் சட்டவரைபைத் தயாரிப்பதற்காக, அமைச்சரவை உப-குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

அதில், அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, அலி சப்ரி, தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். அந்தக் குழுவும் தங்களுடைய ஆலோசனைகளை நேற்றைய அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .