2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘சி.ஐ.டியின் முயற்சி சட்டத்துக்கு முரண்’

Editorial   / 2019 டிசெம்பர் 27 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுடைய விசாரணை நடவடிக்கைகளின் போது, வௌ்ளை வான்களை பயன்படுத்தியிருந்தோமென, பாதுகாப்புத் தரப்பினரே, கடந்த காலங்களில் பலமுறை ஒப்புக்கொண்டிருக்கின்றனர் என நினைவூபடுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்யவதற்கு, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) எடுக்கும் முயற்சி சட்டத்துக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளார். 

ஐ.தே.கவின் தலைமையகமாக சிறிகொத்தாவில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, எம்.ஏ.சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வௌ்ளைவான்களில் கடத்தல்கள் இடம்பெற்றிருந்தால், அது பாரதூரமானவையாகும். அதுத் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். வௌ்ளைவான் கடத்தல்கள் தொடர்பான வழக்குகளில் நானும் முன்னிலையாகி வாதாடியிருக்கிறேன். 

கொழும்பில் பலர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணைகளின்போதும் நான் முன்னிலையாகியிருந்தேன்” என்றார்.

“வௌ்ளைவான் கடத்தல் வழக்கொன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நாளன்று, மலையக இளைஞரொருவர், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால், வெள்ளை வானில் கொண்டுச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதுபோன்ற விசாரணைகளின்போது, பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் வௌ்ளைவான் பயன்படுத்தப்படுமென நீதிமன்றத்தின் கவனத்துக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கொண்டுவந்திருந்தனர்” என்றார். 

வௌ்ளைவான் தொடர்பில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றில் இருக்கின்றன. ஊடகவியலாளர் வித்தியாதரனும் வௌ்ளை வானில் கடத்தப்பட்டார். ஆனால், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக பின்னர்  தகவல்கள் கிடைத்தன. 

இச்சம்பவம் தொடர்பிலும், வித்தியாதரன் கைது செய்யப்பட்ட விதம் குறித்தும் தற்போதைய ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் என்றார். 

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களில் பலர் இறந்துள்ளனர். இன்னும் பலர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவும் வௌ்ளைவானில் கடத்தப்பட்டே காணாமலாக்கப்பட்டுள்ளார். 

“வௌ்ளை வான் கடத்தல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சாரதிகள் இருவர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்காது, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய  முயற்சிப்பது சட்டத்துக்கு முரணானது” என்றார். 

ராஜித சேனாரத்னவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்பிணை மனு, இம்மாதம் 31ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  பரிசீலிக்கும் வரையிலும் காத்திருக்க வேண்டும்.

 ஆனால், அதனை செய்யாது, ராஜிதவைக் கைது செய்தேயாகவேண்டுமெனக் கங்கணம் கட்டியிருப்பதை,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கிறது என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .