2025 ஜூன் 11, புதன்கிழமை

தாயும் மகளும் ஏறாவூரில் படுகொலை

Gavitha   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹூஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில், தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் சடலங்கள்  ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்தே இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  

நூர்முஹம்மது ஹுஸைரா (வயது 56), திருமணமாகிய அவரது மகளான முஹம்மது யூசுப் ஜெனீரா பாணு (வயது 30) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (10) நள்ளிரவு வேளையில் இவர்கள் இருவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது,  ஆயுதமொன்றினால் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாமென, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலங்கள் வீட்டு விறாந்தையில் இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்டதுடன், வீட்டுச் சுவரிலும் இரத்தக்கறை காணப்படுகிறது.

சம்பவ இடத்துக்குச் சென்ற குற்றப்புலனாய்வுப் பொலிஸார், மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வீட்டில், தாயும் மகளும் மாத்திரமே வாழ்ந்துவந்துள்ளனர்.

மகளின் கணவர், கடந்த ஒன்றரை வருடகாலமாக மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்துவருவதாக, விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களின் வீட்டுக்கு உறவினர் நேற்றுக் காலை வந்து பார்த்தபோதே, இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பில் தமக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறினர்.  

தாயும் மகளுமே இந்தவீட்டில் நீண்டகாலமாக வசித்து வந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு 11.30 மணிவரை தாயும் மகளும் தனது வீட்டுக்கு வந்துபேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்றதாக, இவர்கள் வசித்த வீட்டுக்கு முன்னாலுள்ள வீட்டில் வசிக்கும் அயலவரான பாயிஸா எனும் பெண்மணி தெரிவித்தார்.

வழமையாக இரவு வேளையில் தாயும் மகளும் வந்து பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்களது வீட்டுக்குச் செல்வார்கள்.

கடைசியாக அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் வீட்டை விட்டுச் செல்லும் போது மறுநாள் (ஞாயிறு 11 ) அறபா நோன்பு தினமாகையால், தாங்கள் இருவரும் நோன்பு நோற்பதற்கானஆயத்தங்களில் ஈடுபடவேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றதாகவும் அயலவரான பெண்மணி கூறினார்.

வீட்டுக்குச் சென்ற ஜனீராபானு தனது தோழிகளுக்கு அறபா தின நோன்பின் மகிமையைப் பற்றியும் தவறாமல் நோன்பை நோற்குமாறும் குறுந்தகவல் அனுப்பியிருக்கின்றார்.

அதேவேளை, ஞாயிறு அதிகாலை 1.30  மணியிலிருந்து கட்டார் நாட்டிலுள்ள தனது கணவருடன் 14 நிமிடங்கள் 14 செக்கன்கள் பேசியிருக்கின்றார்.

எனவே, அதன் பின்னரே இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீட்டுக் கதவின் தாழ்ப்பாழ் பொல்லால், தாயும் மகளும் தாக்கப்பட்டிருப்பது தடயவியல் பரிசோதனையின் போது தெரியவந்திருக்கிறது.

அதேவேளை, ஜனீரா பானு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்தலத்துக்கு  விஜயம் செய்து கொலை இடம்பெற்ற சூழ்நிலைகளை அவதானித்த மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிபதி சி. சின்னையா சடலங்களை, சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

தாய் மற்றும் மகள் ஆகியோரின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கொலையாளி சமையலறைப் பக்கமிருந்த ஓடுகளைக் கழற்றிவிட்டே வீட்டினுள் இறங்கியிருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

மோப்ப நாய் சகிதம் தடயவியல் நிபுணர்களும் ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளில் ஈடுபட்டனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10