2024 மே 20, திங்கட்கிழமை

’நல்லிணக்க செயலணி ஒரு கண்துடைப்பு’

Freelancer   / 2024 மே 08 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்த அத்துமீறல் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளக பொறிமுறை மூலமாக   சரியான நீதி கிடைக்காது என்பதற்கு யுத்தம் முடிவடைந்த இந்த 15 வருட காலமாக எதுவுமே நடக்காமல் இருப்பதே சான்றாக உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   செவ்வாய்க்கிழமை (07)  இடம்பெற்ற  பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும்  வங்கிகளால் வழங்கப்பட்ட  கடன்கள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்)திருத்தச்  சட்டமூலம் (பராட்டே) என்பன மீதான விவாதத்தில் உரையாற்றும்  போதே இவ்வாறு தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. மேலும் பேசுகையில்,

இன்னுமொரு நல்லிணக்க செயலணியை கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கின்றோம்.   இது செப்டம்பரில் வரவுள்ள ஜெனிவா அமர்வுக்கு காண்பிக்கும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும்.

இது தொடர்பில்   நாங்கள் உலகத்திற்கு  வெளிச்சம் போட்டுக்காட்டுவோம்,  ஒரு நிரந்தர அரசியல் தீர்வின்றி எந்தவித நல்லிணக்கமும் ஏற்பட முடியாது சர்வதேச நீதிமன்ற பொறிமுறை ரோம் சட்டத்தின் மூலம் மட்டுமே நடத்தப்படும்.எனவே இலங்கை அரசாங்கம்   ரோம் சட்டத்திற்கு இணங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
 
இந்த மே மாதத்துடன் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இந்த நேரத்தில் இன்று ( நேற்று)பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் நல்லிணக்கத்திற்கான செயலணி தொடர்பான அரசாங்கம் முன்மொழியும் சட்டமூலம் குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. இதிலே நான் சொன்ன சில விடயங்களை இந்த சபையில் பதிவு செய்வது அத்தியாவசியம்.

அதாவது யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் விசேடமாகவும் மற்றும் யுத்த காலம் முழுவதும் பலவிதமான அத்துமீறல்கள் நடந்துள்ளன. உலகத்தில் நடக்கும் எந்தவொரு யுத்தமும் சுத்தமானது கிடையாது. சுத்தமான யுத்தம் என்று எதனையும் அழைக்க முடியாது. ஆயுதப் போரில் அத்தமீறல்கள் நடந்தே ஆகும். ஆனால் அவ்வாறாக நடக்கும் போது அதனால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது. அதாவது அத்தமீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கும் விசேடமாக காணமாலாக்கப்பட்டவர்கள் விடயத்தில் என்ன நடந்தது? யார் இதற்கு பொறுப்பு? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? என்ற விபரங்களை உறவினர்களுக்கு தெளிவுப்படுத்துவதும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

காணாமலாக்கப்படுவது பலரால் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் சாட்சியங்களின் அடிப்படையில், கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவுக்கு முன்னால் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இறுதி இரண்டு நாட்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரச படையினரிடம் சரணடைந்தனர் என்று அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவினாலேயே சொல்லப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X