2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புதிய அரசியலமைப்பு விவகாரம்: இ.தொ.கா. குழு நியமனம்

Gavitha   / 2016 ஜனவரி 14 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

புதிய அரசியலமைப்பொன்றை நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கவுள்ள நிலையில், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளியினரின் அரசியல் அபிலாஷைகளை அதனுள் உள்ளடக்குவதற்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், குழுவொன்றை நியமித்துள்ளது.

இது தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானில், நேற்று புதன்கிழமை (13) இடம்பெற்றது. அரசியலமைப்பு உருவாக்க ஆலோசனைகளுக்கு, இந்திய வம்சாவளித் தமிழர்களிடமிருந்தும் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள், சுமார் 16 இலட்சம் பேர் உள்ளனர். இவர்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகளை ஆராய்ந்து,  அவற்றுக்குத் தீர்வு காணும் வகையிலும், அரசியல் அபிலாஷைகளைப்
பிரதிபலிக்கும் வகையிலும், அறிக்கையொன்றைத் தயாரித்து, அதனை அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவருக்கு, பெப்ரவரி 09ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழு தெரிவித்தது.

இந்நிலையில், தற்போது நாட்டில், ஒற்றையாட்சி முறைமையா அல்லது சமஷ்டி முறைமையா வேண்டும் என்பது குறித்து, கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கு, சர்வகட்சி மாநாட்டின் போது, சரியான பதிலொன்று முன்வைக்கப்பட்டது.

சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் ஏனையோருடன், இலங்கை உருவாக்கப்பட்டுள்ளது.  இதில், அவர்களது வரலாற்றை, கலாசாரத்தை, உரிமையைப் பாதுகாப்பதற்கு என்று, அரசியலமைப்பு, உரிமையை வழங்கியுள்ளது. இவை எல்லாவற்றையும், புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கவேண்டும் என்பதே நோக்கமாகும்.

இது தொடர்பான ஆலோசனைகள் வழங்க விரும்புவர்கள் 0112 301355 என்ற தொலைநகல் இலக்கத்துக்கோ, cwconline@sltnet.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, தமது பிரேரணைகளை அனுப்பிவைக்கலாம்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X