2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

போலி கல்வி நிறுவனங்கள் தொடர்பில் எச்சரிக்கை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்படாத போலி கல்வி நிறுவனங்கள் பற்றி எச்சரிக்கையொன்று வெளியாகியுள்ளது. 

சமூக நல ஆர்வலரான காமிஸ் கலீல் இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை (07) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்தில் க.பொ.த. (சா.த) மற்றும் க.பொ.த. (உ.த) போன்ற பரீட்சைகள் எழுதிய மாணவர்களை இலக்குவைத்து இயங்கும் சில அதிகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் டிப்ளோமா மற்றும் மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் எனும் பெயரில் தமது கல்வி நிறுவனங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்து வருகின்றன.

மேற்படி கல்வி நிறுவனங்கள், மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவிலோ அல்லது வேறு இலங்கை அரசின் உயர் கல்விசார் நிறுவனங்களினாலோ முறையாக அங்கிகரிக்கப்படாமல் இவ்வாறான முன்னெடுப்புக்களில் ஈடுபடுவது பற்றி பெற்றோர்களும் மாணவர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

இந்நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கே அதிகளவாக விநியோகிக்கப்படுகின்றன. 

அத்தோடு, இச்சான்றிதழ்கள் வெளிவிவகார அமைச்சினால் அங்கிகரிக்கப்படுவதற்கு எவ்வித தகுதிகளும் அற்றவை என்பதே உண்மையாகும்.

மேலும், முறையாக நான்கு தொடக்கம் பன்னிரண்டு மாதங்கள் கற்பிக்கப்படவேண்டிய பாட நெறிகளை ஒன்று தொடக்கம் மூன்று மாதங்களில் கற்பிக்கப்படுவதாகக் கூறி குறித்த மாணவர்கள் அடைய விளையும் தேர்ச்சியினை மிகவும் இலகுவாக சீரழித்தும் விடுகின்றனர்.

எனவே, இந்த மோசடி குறித்து பெற்றோர்கள் விழிப்படைந்து தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்படைய ஆவன செய்ய முடியும்.

கல்வி நிறுவனம் ஒன்று மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளமையினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உறுதி செய்து கொள்ளும் இணைய தள முகவரி: http://220.247.221.26/Insreg_Home/Insreg_Institute_Search.php என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X