2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

“பெண்ணுறுப்பு மேல் ஆணுறுப்பை வைப்பது வன்புணர்வு இல்லை”

S.Renuka   / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

"பெண்ணுறுப்பின் மேல் ஆணுறுப்பை வைத்தால் அது  பாலியல் வன்புணர்வு இல்லை. வன்புணர்வுக்கான முயற்சி தான்" என்று கூறி பாலியல் வன்புணர்வு வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையை மூன்றரை ஆண்டுகளாக குறைத்து அண்மையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டம் அர்ஜுனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டுக்கு சென்று அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் கடைக்கு சென்று வரும்படி கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெண் காசு தரும்படி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் அந்த பெண்ணை தனது வீட்டுக்கு இழுத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த பெண்ணை தனி அறையில் அடைத்து கை, கால்களை கட்டிப்போட்டு சித்திரவதை செய்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது. நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டுக்கு வராததால் அவரது தாய் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்துள்ளார். நீண்டநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவர் தனது மகளை கண்டுபிடித்தார். அப்போது அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி தாயிடம் கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, அர்ஜுனி பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு செய்ததாக இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, அவர் கைதும் செய்யப்பட்டார். 

இதுதொடர்பான வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தம்தாரி முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிறகு வழக்கு ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2005ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376(1) (பலாத்கார வழக்கில் தண்டனை)-ன் கீழ் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறி 7 ஆண்டு கடும் காவல் சிறைத் தண்டனையும், சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாக சட்டப்பிரிவு 342இன் கீழ் 6 மாத சிறை தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

இதையடுத்து, அந்த இளைஞர் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி நரேந்திர குமார் வியாஸ் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. மருத்துவ அறிக்கை, பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீவிரமாக விசாரித்து வந்தது.
அப்போது குற்றச்சாட்டப்பட்ட நபரின் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பில் செலுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை மருத்துவ ரிப்போர்ட்டும் உறுதியளித்தது. அதேவேளையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடையில் விந்தணுக்கள் இருந்ததும் உறுதியானது.

இது உடல் ரீதியான தொடர்பு மற்றும் விந்து வெளியேற்றம் நிகழ்ந்திருப்பதைக் குறித்தாலும் கூட பெண்ணுறுப்பின் உள்ளே விந்தணு செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை உயர்நீதிமன்றம் கவனித்தது.

அதாவது, பெண்ணுறுப்பின் மேல் ஆணுறுப்பை வைத்து அந்த இளைஞர் மிரட்டியுள்ளார். இதனை பாதிக்கப்பட்ட பெண்ணும் தனது வாக்குமூலத்தில் உறுதி செய்திருந்தார். இதையடுத்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

நீதிமன்றம் தனது தீர்ப்பில், ‛‛பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறி பதிவு செய்யப்பட்ட ஐபிசி சட்டம் 375யை நிரூபிக்க முடியவில்லை. அதேவேளையில், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி இழுத்து சென்று ஆடைகளை களைந்து பெண்ணின் பிறப்புறுப்பில் ஆணின் இனப்பெருக்க உறுப்பை வைத்துள்ளார்.

இது வன்புணர்வு முயற்சி தான். முழுமையான பாலியல் வன்புணர்வு என்று கூற முடியாது. இதனால் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை மூன்றரை ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது” என உத்தரவு பிறப்பித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X