2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை நேரங்கள் மாற்றம்

Editorial   / 2020 ஜூன் 10 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

· 4 கட்டங்களாகக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
· ஜூலை 6 முதல் மாணவர்கள் அழைக்கப்படுவர்
· செப்டெம்பர் 7 முதல் ஒக்டோபர் 2 வரை A/L பரீட்சை
· செப்டெம்பர் 13இல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை
· பாடசாலை நேரங்களிலும் மாற்றம்; பி.ப 3.30 வரை நீட்டிப்பு
· வார இறுதி நாள்களில் பாடசாலை இல்லை
· தரம் 1, 2 மாணவர்களை வரவழைக்க இன்னும் தீர்மானமில்லை
· பாடசாலைகளுக்கான சுகாதார வசதிகளை ஏற்படுத்த ‌ரூ. 289 மில்லியன் செலவு

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள், இம்மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அந்த வகையில், பிரதான நான்கு கட்டங்களின் கீழ், பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று (09) நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள், இம்மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அந்த வகையில், பிரதான நான்கு கட்டங்களின் கீழ், பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நேற்று (09) நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

1ஆவது கட்டம்

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மேற்படி நான்கு கட்டங்களில் முதல் கட்ட​மாக, இம்மாதம் 29ஆம் திகதியன்று பாடசாலைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் கட்டம், ஜூலை 3ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்குமென்றும் இக்காலப்பகுதியில், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்கள் கடமைக்குத் திரும்ப வேண்டுமென்றார்.

அத்துடன், அவர்கள் இவ்விரு வாரக் காலப்பகுதியில், பாடசாலைகளைச் சுத்தப்படுத்தல், கிருமிநாசினி தெளித்தல், கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளல் என்பது தொடர்பில் ஆலோசித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அமைச்சர் கூறினார்.

2ஆம் கட்டம்

ஜூலை 6ஆம் திகதி முதல ஆரம்பிக்கவுள்ள 2ஆம் கட்ட நடவடிக்கைகளின் போது, தரம் 05, 11, 13ஐ சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்குச் சமூகமளிக்க வேண்டும் என்பதோடு, அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

இந்த 2ஆம் கட்டம், ஜூலை 17 வரையில் நடைமுறையில் இருக்கும். இவ்விரு வாரங்களும், அப்பியாச (பயிற்சி) வாரங்கள் என்றே அழைக்கப்படுவதோடு அக்காலப்பகுதி பெரும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

3ஆம் கட்டம்

ஜூலை 20 முதல் 24 வரை மூன்றாம் கட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதோடு, இக்காலப்பகுதியில், தரம் 10 மற்றும் 12ஐ சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவார்கள்.

4ஆம் கட்டம்

ஜூலை 27 முதல் 4ஆம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு, இக்காலப்பகுதியில் தரம் 3, 4, 6, 7, 8, 9க்கான மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தரம் 1 மற்றும் 2ஐ சேர்ந்த மாணவர்களைப் பாடசாலைகளுக்கு அழைக்கும் நாள் தொடர்பில் இன்னமும் தீர்மானமில்லை என்று தெரிவித்த அமைச்சர், 5ஆம் கட்டமாக அவர்களை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றார்.

க.பொ.த உ/த பரீட்சை

இதேவேளை, ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் செப்டெம்பர் முதலாம் திகதி வரை நடத்தவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், செப்டெம்பர் 7ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள அப்பரீட்சை, ஒக்டோபர் 2ஆம் திகதி முடிவடையுமென்று, கல்வி அமைச்சர் கூறினார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி நடத்த ஏற்பாடாகியிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி நடத்தப்படுமெனத் திகதி குறிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நேரங்கள் மாற்றம்

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பாடசாலைக் கல்வி நேரங்கள் மாற்றப்படுமெனத் தெரிவித்த அமைச்சர், அந்த நேரங்களைப் பட்டியலிட்டார். அந்த வகையில்,
தரம் 3 முதல் 4 வரை - காலை 7.30 - மு.ப 11.30
தரம் 5 - காலை 7.30 - நண்பகல் 12
தரம் 6 முதல் 9 வரை - காலை 7.30 - பி.ப 1.30
தரம் 10 முதல் 13 வரை - காலை 7.30 - பி.ப 3.30

அத்துடன், வார இறுதி நாள்களிலும் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்று யோசனை முன்வைக்கப்பட்ட ​போதிலும், மாணவர்களின் மனநிலையைக் கருத்திற்கொண்டும் பிரத்தியேகக் கல்வி நடவடிக்கைகளுக்காக இடமளிக்கவும், அந்த யோசனையை நடமுறைப்படுத்துவது இல்லையெனத் தீர்மானித்ததாக, அமைச்சர் கூறினார்.

இதேவேளை, பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, அரசாங்கத்துக்கு 289 மில்லியன் ரூபாய் செலவாகிறதெனத் தெரிவித்த அவர், அதில் 116 மில்லியன் ரூபாய், காய்ச்சலைப் பரிசோதிப்பதற்கான வெப்பமானிகளைக் கொள்வனவு செய்யச் செலவாகிறது என்றும் கூறினார்.

மேலும், பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர், மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை எவ்வாறு அமைப்பதென்பது குறித்து, போக்குவரத்து அமைச்சு மற்றும் அது சார்ந்த நிறுவனங்களின் பிரதானிகளுடன் பேசப்பட்டு வருவதாகவும், கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .