2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

பெரும் கூட்டணியை உருவாக்க சந்திப்பு

Simrith   / 2024 ஏப்ரல் 25 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளார்.

கூட்டத்தில் மகஜன எக்சத் பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொண்டார். மேலும், அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ், ஹரின் பெர்னாண்டோ, காஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியின் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.

ஜனாதிபதியின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தனித்தனியாக மே தினப் பேரணிகளை நடத்துவதற்கும் அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஒத்த கருத்துடைய ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டணியாகவும் தீர்மானித்தன.

ஜனாதிபதி இம்முறை பொது வேட்பாளராக முன் வந்து குறித்த கூட்டணியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவார்.

“ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடமாட்டார்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

அனைத்து கட்சிகளும் குழுக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சின்னத்தில் புதிய கூட்டணியை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் அமைச்சர் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே அரசியல் வட்டாரத்தின் தகவல்களின் படி, ஜூன் மாதம் IMF இன் (சர்வதேச நாணய நிதியம்) மூன்றாவது தவணையை நாடு பெற்ற பிறகு, தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி பிரச்சாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும மற்றும் பிவிதுரு ஹெல உறுமய (PHU) தலைமையிலான அரசியல் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், SLPP யில் இருந்து விலகிய இந்தக் கட்சிகள் மற்றும் குழுக்களை அணுகவும் முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .