2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்த - திகா சபையில் கடும் வாக்குவாதம்

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

1,000 ரூபாய் சம்பள அதிகரிப்புக்காக, அண்மையில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் பெருந்தோட்டத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் இணைந்துக் கொண்டனரெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, அந்த போராட்டங்கள் முடிந்து விட்டனவா? எனக் கேள்வி எழுப்பினார்.

அஞ்சல் சேவைகள்,முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில், இன்று (03) பங்கேற்று கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், 1,000 ரூபாய் கிடைக்காவிட்டால் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் திகாம்பரம் உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர். எங்கே பதவி விலகினார்களா? மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டனவா என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பீ. திகாம்பரம், பதவி விலகுவதாக தான் கூறவில்லை. குறைந்த பட்சமாக 50 ரூபாயை நாள் சம்பளத்துடன் இணைத்து வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்தது. அவ்வாறு 50 ரூபாய் வழங்காவிட்டால் பதவி விலகுவதாகத் தெரிவித்தோம். ஆனால் இப்போது அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அதனை வழங்க அமைச்சர் நவீன் முன்வந்துள்ளார் என்றார்.

குறித்த தொகை இன்னும் வழங்கபடவில்லையே என மறுபடியும் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்ட, அமைச்சர் திகாம்பரம் இந்த மாதத்திலிருந்து குறித்த கொடுப்பனவு வழங்கப்படும். தான் ஒருபோதும் அரசியல் இலாபங்களுக்காக செயற்படமாட்டேன். எமது மக்கள் தொடர்பில் அதிக அக்கறைக் கொண்டுள்ளேன். 1,000 ரூபாய் சாத்தியப்படாது. முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கூறினேன் என்றார்.

பதிலுக்கு உரையாற்றிய மஹிந்த அமரவீர, பிரச்சினையில்லை அமைச்சரே நீங்கள் எனது நண்பர் அந்த மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு சம்பளம் மாத்திரம் பிரச்சினையில்லை. அடிப்படை வசதிகளைப் பெறுவதிலும் அவர்களுக்கு பிரச்சினையுண்டு. மாணவர்களுக்கு கல்வி கற்க உரிய பாடசாலைகள் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை, சுகாதாரப் பிரச்சினைகள், வீதிப் பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் உள்ளன என்றார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் திகா, இத்தனை பிரச்சினைகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், உங்களது ஆட்சிக்காலத்தில் ஏன் இதைப்பற்றி பேசவில்லை. ஏன் எதிர்கட்சிக்கு சென்றவுடன் மாத்திரம் பேசுகிறீர்கள் என்றார்.

மஹிந்த அமரவீர: உங்கள் எண்ணம் தவறு அமைச்சரே, நாம் ஆளுங்கட்சியில் இருக்கும் போது இதைப்பற்றி கதைத்தோம். அதிகாரம் இருக்கும் போது ஒரு கதையும் எதிர்கட்சியில் இருக்கும் போது வேறொரு கதையும் பேசுபவன் நான் இல்லை. இப்போது வடிவேல் சுரேஸ் அமைதியாக இருக்கின்றாரே.

இதன்போது குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டில் பல ஜனாதிபதிகளையும், பல அரசாங்கங்களையும் அமைக்க உதவி செய்துள்ளனர். இன்று எதிர்க்கட்சியினர் கதைப்பது போன்று, கடந்த 10, 15 வருடங்களில் உங்களது அரசாங்கம் மலையக மக்களுக்காக நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று மலையகம் சிஙகப்பூராக மாறியிருக்கும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .