2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மஹிந்தவின் பாணியில் சாணக்கியன் பதிலடி

Freelancer   / 2022 மார்ச் 07 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

டீசல் தியனவாத (டீசல் இருக்கின்றதா)?, பெற்றோல் தியனவாத (பெற்றொல் இருக்கின்றதா)?, கிரிபிடி தியனவாத (பால்மா இருக்கின்றதா)? தெங்க செபத (இப்போ சுகமா)?

-இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பாணியிலேயே கேள்விக்கணைகளைத் தொடுத்து, அரசுக்குப் பதிலடி கொடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்.  

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்ட நேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் நேற்று (06) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்விகளை எழுப்பி, அரசுக்குப் பதிலடி கொடுத்தார் சாணக்கியன்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற எமது போராட்டத்துக்கு மலையக மக்களின் ஆதரவும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டவே இங்கு வந்துள்ளோம். நீங்கள் அனைவரும் அணிதிரண்டு ஆதரவை வழங்கியுள்ளீர்கள். அதற்காக நன்றிகள்.  

மலையகப் பெருந்தோட்ட மக்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை அவர்கள் தோளில் சுமக்கின்றனர். ஆனால், அவர்களின் பிள்ளைகளுக்குக் குடிப்பதற்குப் பால்மா இல்லை.
 
ஓரிரு இடங்களிலேயே ஆயிரம் ரூபா நாட் சம்பளம் வழங்கப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் அது போதுமானதாக இல்லை. 2 ஆயிரம் ரூபா நாட் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
 
இந்த அரசு தோல்வியடைந்துவிட்டது. செல்வாக்கையும் இழந்து வருகின்றது. இந்த அரசைத் தமிழ் மக்கள் அனுப்ப வேண்டியதில்லை, அரசுக்கு வாக்களித்தவர்களே வீட்டுக்கு அனுப்பிவைப்பார்கள்.

மஹிந்த ராஜபக்ச எதிரணியில் இருக்கும்போது சில கேள்விகளைக் கேட்பார். அதனை நான் இங்கு கேட்க விரும்புகின்றேன்.

டீசல் தியனவாத (டீசல் இருக்கின்றதா)?, பெற்றோல் தியனவாத (பெற்றொல் இருக்கின்றதா)?, கிரிபிடி தியனவாத (பால்மா இருக்கின்றதா)? தெங்க செபத (இப்போ சுகமா)? - என்றார். (K)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X