2025 ஜூன் 25, புதன்கிழமை

‘ரிஷாட்டின் அரசியலை கருவறுப்பதற்கான சதி’

Editorial   / 2019 மே 31 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி. அமிர்தப்பிரியா   

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை எனவும் அமைச்சர் ரிஷாட்டின் அரசியலை கருவறுப்பதற்குத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிகளாகவே இதனைத் தாங்கள் கருதுவதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸால் இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று (30) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சின் முக்கியஸ்தர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.   

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான மஹ்ரூப், செயலாளர் எஸ்.சுபைதீன், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் வீ.ஜெயதிலக, மேல் மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் பாயிஸ், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நசீர் , உயர்பீட உறுப்பினர் கலாநிதி மரைக்கார், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.   

“ ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர், இந்தச் சம்பவங்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரைத் தொடர்புபடுத்தி வேண்டுமென்றே முடிச்சுப்போட்டு சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகவே நாங்கள் இதனை கருதுகிறோம். அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செயற்பட்டு வரும் எமது கட்சியும், கட்சித்தலைவரும் பயங்கரவாதத்தையோ தீவிரவாதத்தையோ என்றுமே ஆதரிப்பவர்களல்ல. 52 நாள் அரசாங்கத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் ஆதரவளிக்க மறுத்ததன் காரணமாகவே அதற்குப் பழிதீர்க்க இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துகின்றனர்” என்றனர்.   

எதிர்க்கட்சியில் உள்ள மக்கள் செல்வாக்கில்லாத சில அரசியல் வாதிகள் மஹிந்தவின் மடியில் கிடந்துகொண்டு இனவாதத்தைப் பரப்பி, பெரும்பான்மை மக்களுக்கு உசுப்பேத்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான தந்திரோபாயமாகவே இதனைப் பார்க்கின்றோம் என்று தெரிவித்த அவர்கள், அமைச்சர் ரிஷாட்டை துரத்துவதன் மூலம் அரசாங்கத்துக்குள் ஒரு நெருக்கடியை கொண்டுவந்து ஆட்சியை கவிழ்ப்பதே இவர்களின் திட்டமாகும் என்றனர்.   

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்க்கட்சிக்காரர்களின் கோரிக்கைக்கு கடந்த ஒக்டோபர் மாதம் செவிசாய்த்திருந்தால் இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது. அவரைத் தூக்கி உச்சாணி கொப்பில் இப்போது வைத்திருப்பார்கள். எனவே, அமைச்சர் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களையும் நாம் நிராகரிக்கின்றோம். நம்பிக்கையில்லாப்பிரேரணையை வெற்றிகரமாக முகம்கொடுத்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முறியடிப்பார் என்றனர்.   

“மக்கள் துன்பங்களில் இருக்கும் இந்தக்காலத்தில் ஊடகங்கள் இனவாத கருத்துகளுக்குத் தீனி போட்டுக்கொண்டிருக்காமல் மிகப் பொறுப்புடனும் தர்மத்துடனும் செயலாற்ற வேண்டும் என நாம் அன்பாக வேண்டுகின்றோம்” என்றனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .