2024 மே 17, வெள்ளிக்கிழமை

விசா வழங்குவதில் சிக்கல்: கட்டுநாயக்கவில் பதற்றம்

Editorial   / 2024 மே 02 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே.1 ஆம் திகதி முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், அன்றையதினம் (மே.1)  மாலை 05.00 மணி முதல் அவர்களால் கணினிகளை சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.  

நீண்டநேரம் காத்திருந்தமையை அடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

                  இதுவரை, குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் ஒரு நிமிடம் என்ற குறுகிய காலத்திற்குள் விசாவை வழங்கியிருந்தனர்.

               அதற்காக இந்தியா, சீனா போன்ற சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் நாடுகளில் இருந்து கட்டணம் வசூலிக்காமல், சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் 30 நாட்களுக்கு 20 அமெரிக்க டொலர்களும், ஏனைய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளிடம் இருந்து  50 அமெரிக்க டொலர்களும் வசூலிக்கின்றனர்.  

               12 வயதிற்குட்பட்ட பயணிகள் மற்றும் புலம்பெயர்ந்த பயணிகளுக்கு இலவச விசாக்கள் வழங்கப்பட்டன.

           ஆனால் மே.1 ஆம் திகதி  மாலை 05.00 மணிக்கு, இந்த விசா வழங்கும் பணியை மேற்கொண்ட இந்திய தனியார் நிறுவனம் சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் விசா கட்டணத்துடன் கூடுதலாக 22 அமெரிக்க டொலர்களையும், பிற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து 25 அமெரிக்க டொலர்களையும் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.

                இந்த விசா கட்டணங்களில் சேவைக் கட்டணங்கள் மற்றும் வசதிக் கட்டணங்களும் வசூலிக்கப்பட்டுள்ளன.

                 அதன்படி, முழு விசாவுக்கான மொத்தக் கட்டணம் 100.77 அமெரிக்க டொலர்களாக மாறியுள்ளது, அதில் 25 அமெரிக்க டொலர்கள் இந்த இந்திய தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என்று குடிவரவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

              இதன் பின்னணியில், ஒரு வருடத்திற்குள் 03 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்தால், இந்த இந்திய தனியார் நிறுவனம் 66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 20,000 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

               இந்த பின்னணியில், 05/01 மாலை 05.00 மணிக்கு மட்டும், சுமார் 10 இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வந்து விசா வழங்கத் தொடங்கினர், ஆனால் அன்றிரவு 08.30 மணி வரை விமான பயணிகள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர், அந்த நேரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோபத்துடன் இருந்தனர்.

              மீண்டும் இரவு 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் நீண்ட வரிசையில் நின்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள ஆரம்பித்ததாக குடிவரவு குடியகழ்வு திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.

                 இதன் காரணமாக விமான நிலைய கடமைகளுக்கு பொறுப்பான அதிகாரி, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார், விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

             பின்னர், இந்த இந்திய தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் இரவு 11.30 மணியளவில் விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வசூலித்த பணத்துடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறினர்.

              இதேவேளை, அன்றைய தினம் முதல் பழைய கட்டண முறையின் கீழ் வீசா வழங்குவதை ஆரம்பிக்குமாறு குடிவரவு குடியகழ்வு பணிப்பாளர் நாயகம்  ஹர்ஷ இலுக்பிட்டிய,  கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கியிருந்தமையினால் தற்போது குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். நிலைமையும் வழமைக்குத் திரும்பியது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .