Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 10 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்றாகும். இதனைச் செய்தவர்கள் முஸ்லிம்களாகக் கருதப்படமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள், “நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும்” எனக் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய அச்ச சூழ்நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் போராட்டத்துக்கு, ஊடகங்கள் உட்பட சகல தரப்பினரின் ஒத்துழைப்பைக் கோருவதாகவும் கூறினர்.
கொள்ளுப்பிட்டி மென்டரின் ஹோட்டலில், நேற்று முன்தினம் (08) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர்.
ரிஸ்வி முப்தி
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி,
“முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக, இந்தக் கொடூர கொலைகளையும் வன்முறைகளையும் கண்டிப்பதோடு பயங்கரவாதிகளை இல்லாது ஒழிப்பதில் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றது. இஸ்லாம் இந்த வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய செயலைச் செய்த கயவர்களை இல்லாதொழிப்பதற்கு பாதுகாப்புப் படையினருக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருவது மட்டுமன்றி, இந்த மிலேச்சத்தனமான செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதி உச்சத் தண்டனையை வழங்க வேண்டுமென, நாங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் சார்பிலும் கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார்.
“மிகக் குறுகிய காலத்தில் இந்தக் குரூர செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதில் எமது முஸ்லிம் சமுதாயத்தின் பூரணமான ஒத்துழைப்பே காரணம் என, நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்” எனத் தெரிவித்த அவர், “இந்த நாட்டின் பொறுப்புள்ள பிரஜைகள் என்ற வகையில், முழு முஸ்லிம் சமூகமும் சொல்லால் மாத்திரமன்றி செயலாலும் கயவர்களை ஒழிப்பதில் ஒத்துழைத்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஊடகங்கள் செய்திகளை மிகைப்படுத்தி வெளியிட வேண்டாம்“ எனவும் இனங்களைத் துருவப்படுத்தும் செயல்களைத் தவிர்க்கும் படியும் தயவாய்க் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.
என்.எம்.அமீன்
முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் கருத்துரைக்கையில், “இந்த நாட்டில் 99 சதவீதமான முஸ்லிம்கள், இந்தப் பயங்கரவாத செயல்களுக்கு எதிராகவே இருக்கின்றனர். இந்த விடயத்தில் எங்களுக்குள் எந்த பேதமும் இல்லை, எமது சகோதரர்களான கிறிஸ்தவர்களின் இறுதிக்கிரியைகளில் கூட நாம் கலந்துகொள்ள முடியாத துர்ப்பாக்கியத்திலும் கவலையிலும் இருக்கின்றோம்” என்று தெரிவித்த அவர், “முஸ்லிம் என்ற பெயரில் ஒரு சிறிய குழு மேற்கொண்ட இந்தச் செயற்பாடு தொடர்பில் முஸ்லிம்களுக்கு எதுவுமே தெரியாது. இந்தத் தற்கொலையாளிகள் சிலரின் மனைவியர்களுக்குக் கூட இவ்வாறான செயல் தொடர்பில் தெரிந்திருக்காமலேயே இருந்தது என்பது, விசாரணைகளில் தெரியவருவதாக அறிகிறோம் என்றார்.
“எமது சமூகம் பல்வேறு துன்பங்களை அனுபவித்த காலத்தில் கூட, நாங்கள் வன்முறைகளை நாடியதில்லை. கடந்த காலங்களில் காத்தான்குடி பள்ளிவாசலில் 200 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வடக்கில் வாழ்ந்த 1 இலட்சம் பேர் ஒரே இரவில் அகதிகளாக்கப்பட்டனர். அப்போதெல்லாம் வன்முறையை நாடாமல் இருந்த எமது சமூகம், இப்போது நாடுமா?” எனக் கேட்டார்.
“இந்தப் பயங்கரத்தின் சூத்திரதாரிகளான கொடுமையாளர்களை சாய்ந்தமருதுவில் எங்களது சமூகமே காட்டிக்கொடுத்தது. காட்டிக்கொடுக்க வேண்டாமெனக் கூறி, கட்டுக்கட்டாக காசுகளை அந்தப் பயங்கரவாதிகள் வீசியபோதும் முஸ்லிம் மக்கள் அதற்கு விலை போகவில்லை. எனினும் தேடுதல் நடவடிக்கையின் போது, வீணான தொல்லைகள் தரப்படுகின்றன” என்றார்.
“ஒருமாத காலத்துக்குள்ளே பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முழு மூச்சான ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம்.இந்தச் சம்பவத்தின் பின்னர் தினமும் அழுதுகொண்டிருகின்றோம் . இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் செய்திகளை வழங்குமாறு வேண்டுகின்றோம்” என்றார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறியதாவது,
“இந்த நாடு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவசரமாக நாம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டிய தேவை உள்ளது என்பது குறித்து நாம் மனம்கொள்ள வேண்டும்” என்றார்.
“சாதாரணமான குற்றச்செயல்களைப் புரியக்கூடிய ஆயுதங்கள் மற்றும் தற்காப்பு ஆயுதங்களை முஸ்லிம்களின் வீடுகளில் இருந்து தேடுதலின் போது அவை கிடைத்தால் அதனைக் காட்டிப் பயங்கரவாதத்துக்குத் தயாராகும் சமூகமாக முஸ்லிம் சமூகம் காட்டப்படுவது வேதனையானது” என்றார்.
நடுநிலைத் தன்மையுடன் இந்த விடயங்கள் பார்க்கப்பட வேண்டும். சமூக மட்டத்தில் எத்தகைய முழு ஆதரவை நாம் வழங்க முடியுமோ அந்த அளவுக்கு நாம் வழங்கி வருகின்றோம்.
மிக மோசமான, மிலேச்சத்தனமான, ஈனத்தனமான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பூண்டோடு ஒழிக்கவேண்டும் என்பதிலும் களைந்தெடுக்க வேண்டுமென்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்று தெரிவித்த அவர், ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதோடு மிகைப்படுத்திய செய்திகளை வெளிக்காட்டுவதைத் தவிர்த்து, நாட்டைச் சுபீட்சமான பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
5 hours ago
5 hours ago