2025 மே 15, வியாழக்கிழமை

முறை கேடாக தொழில் பெறுவோரின் நியமனம் இரத்தாகும் - எம்.எஸ்.சுபைர்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 05 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)
 
கிழக்கு சுகாதார அமைச்சினால் இதுவரை தொழில் வாய்ப்பை பெற்றுக்கொண்டவர்கள் குறித்த தொழிலுக்காக பணம் வழங்கியிருப்பதாக அறியக்கிடைத்தால் உடனடியாக அவர்களது நியமனங்கள் இரத்துச்செய்யப்படும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
 
கிழக்கு வைத்தியசாலைகளில் சிற்றூழியர்களாக பணியாற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்ட 23 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் சுபைர் மேற்படி எச்சரிக்கையை விடுத்தார்.
 
'சுகாதாரத்துரை அர்பணிப்பு தியாகமிக்க துறை இப்படிப்பட்ட துறைக்கு வருபவர்கள் உண்மையான தியாகமிக்கவர்களாக இருப்பது அவசியம். அதைவிடுத்து பணம் கொடுத்து இத்துறைக்கு வருபவர்களிடம் தியாகத்தை எதிர்பார்க்க முடியாது' என்றும் சுட்டிக்காட்டினார்.
 
'கிழக்கு மாகாணத்தில் தொழில் பெற்றுத்தருவதாகக்கூறி பணம் அறவிடும் கும்பலொன்று ஆங்காங்கே சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
 
கிழக்கு சுகாதார அமைச்சின் மூலமும் ஏனைய அமைச்சுக்களின் மூலமும் பலநூறு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. நான் அறிந்த வரை நேர்மையாகவும், நியாயமாகவும் தகுதியானவர்களுக்கே தொழில் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் எவராவது முறைகேடான முறையில் தொழில் பெற்றிருப்பது கண்டறியப்பட்டால் உடன் அவர்களது நியமனம் இரத்துச்செய்யப்படுவதோடு சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
 
வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தை கௌரவமிக்க தொழிலாக கருதுவதாக நான் நினைக்கின்றேன். திருடாமல் மற்றவர்களை சுரண்டி வாழாமல், யாசகம் புரியாமல் செய்கின்ற எந்தத்தொழிலும் கௌரவமிக்க தொழில்களே.

சிற்றூழியர்கள் சிலர் கௌரவமிக்க தொழில் என்ற கருதி தமது பணிகளில அலட்சியமாக இருப்பதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஏற்கனவே இவ்வாறான முறைப்பாடொன்று திருமலை மாவட்டத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையிலிருந்து கிடைக்கப்பெற்றது. அதற்கமைய அங்குள்ள சிற்றூழியர்களுக்கு தகுந்த பதிலடி வழங்கப்பட்டுள்ளது.
 
தியாகம், அர்ப்பணிப்புடன் இத்துறையில் ஈடுபடுங்கள். முடியாதவர்கள் மற்றவர்களுக்கு வழி விடுங்கள்' என்றும் அமைச்சர் சுபைர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .