2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுங்கள்: சம்பூர் அகதிகள் தெரிவிப்பு

Super User   / 2012 மே 08 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


யுத்தம் காரணமாக திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து கிளிவெட்டி இடைத்தங்கல் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சம்பூர் அகதிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த முகாம்களில் வசிக்கும் தமிழ் மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு  குறைகளை கேட்டறிந்தனர்.

இதன்போதே, குறித்த மக்கள் இக்கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விடுத்துள்ளனர். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சம்பூர் அகதிகள்,

"2006ஆம் ஆண்டு சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து 2 வருடங்கள் மட்டக்களப்பிலும் பின்னர் கிளிவெட்டியிலும் 6 வருடங்களாக அகதிகளாக வாழும் இந்த மக்கள் பல துயரங்களை எதிர்நோக்குகின்றோம்.

தாங்கள் வசிக்கும் தகரத்தினாலான கொட்டகைகளில் அதிக வெப்பமாக இருப்பதனால் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை குறிப்பிட்ட கொட்டகைக்குள் நுழைய முடியாதுள்ளது.

அத்துடன் மலசலகூட வசதிகள், தண்ணீர் வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் என்பன போதியளவு வழங்கப்படவில்லை. பொது சுகாதார உத்தியோகத்தர்கள் முகாமிற்கு வருகை தருவதில்லை.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உலர் உணவு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தொண்டர் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு முன்வந்தாலும் படையினர் அனுமதி வழங்காததால் அந்த உதவிகளும் தங்களுக்கு கிடைப்பதில்லை.

எவ்வளவோ வசதியாக வாழ்ந்த தாங்கள் இன்று அகதி வாழ்க்கை வாழ்வதாகவும் எப்படியாவது தங்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவி செய்யவேண்டும்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் கூட தங்களின் முகாமிற்கு விஜயம் செய்து தாங்கள் அனுபவிக்கும் துன்பங்களை பார்வையிடாதது தங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது" என்றனர்.


  Comments - 0

  • Hruthik Friday, 11 May 2012 11:06 AM

    பொன் செல்வராசா மற்றும் பா.அரியநேத்திரன்... thank you

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .