Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 14, சனிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 05 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு , கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் தின அனுஸ்டிப்புக்களை திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்தி வடக்கு - தெற்குக்கிடையில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் காணொளிகளை பதிவேற்றம் செய்தவர்களில் இருவர் புதிய ஜனநாயக முன்னணியின் செயற்பாட்டாளர்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை(04) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் கடந்த இரு வாரங்களில் இடம்பெற்ற கைதுகள் மற்றும் அதற்கான காரணங்களை சபைக்கு அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தேன்.
வடக்கு,கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற மாவீரர் தின அனுஸ்டிப்பு நாட்டில் பிரதான பேசுபொருளாகவுள்ளது. உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக்கூரும் உரிமை அனைவருக்கும் உண்டு. வடக்கு மற்றும் கிழக்கு, தெற்கு உட்பட அனைத்து மாகாணங்களுக்கும் இந்த உரிமை உண்டு. நாங்கள் இன்றும் இந்த நிலைப்பாட்டில்தான் உள்ளோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த அமைப்பின் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடமளிக்க முடியாது என்பதை தெளிவாக அறிவித்துள்ளோம். கல்கமுவ பகுதியில் அண்மையில் நான் குறிப்பிட்ட விடயத்தை திரிபப்படுத்தி பொய்யான வகையில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த பொய்யான செய்தி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம்திகதி முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டது. இவ்விரு மாகாணங்களிலும் 244 மாவீரர் தின அனுஸ்டிப்புக்கள் இடம்பெற்றன .இவற்றில் 10 அனுஸ்டிப்புக்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டன அல்லது ஊக்குவிக்கும் வகையில் ஒருசில விடயங்கள் இடம்பெற்றிருந்தன..இது தொடர்பில் பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மாவீரர்தின அனுஸ்டிப்பின் போது விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி , பருத்தித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சுன்னாகம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தினம் குறித்து தெற்கில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் பல விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன. 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தின புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை திரிபு படுத்தி அவை 2024 ஆம் ஆண்டு மாவீரர் தினம் என்று தெற்கில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
மாவீரர் தினத்தை முன்னிட்டு இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவேற்றம் செய்த நால்வர் கைது செய்யப்பட்டனர். வடக்கில் ஒருவரும் பத்தேகம, மருதானை, பொரகஸ்கமுவ ஆகிய பகுதிகளில் ஏனையவர்களும் கைது செய்யப்பட்டனர்.
வடக்கு - தெற்கு மாகாணங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை பதிவேற்றம் செய்தவர்களில் இருவர் புதிய ஜனநாயக முன்னணியின் செயற்பாட்டாளர்கள் .
ஊடகச் சுதந்திரத்தை முடக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. இருப்பினும் அனைத்து உரிமைகளும் இனங்களின் நலனை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும். கடந்த காலப்பகுதியில் மலட்டு கொத்து, மலட்டு ஆடை, கருத்தடை உள்ளிட்ட பல இனவாத கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் விளைவு பாரதூரமானதாக அமைந்தது. இவ்வாறான நிலைமை மீண்டும் தோற்றம் பெறுவதற்கு இடமளிகக முடியாது.எனவே புதிய சட்டங்களை இயற்றியேனும் தேசிய நல்லிணக்கக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago