2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

’உதவிகளை வழங்கத் தயார்’

Editorial   / 2017 செப்டெம்பர் 24 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்துவகையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்தார்.

இலங்கை தேசத்துடன் மிக நெருக்கமாக செயற்பட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த, உலகின் முன்மாதிரி தேசமாக எழுந்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக உதவும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (23) பிற்பகல் நியூயோர்க் நகரில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாரிஸ் மாநாட்டில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் மேற்கொண்டுவரும் முயற்சிகளை பாராட்டிய செயலாளர் நாயகம், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அபிவிருத்தி நடைமுறைகளுடன் இணைத்துக்கொள்வதற்கு ஜனாதிபதி காட்டிவரும் கரிசனை குறித்தும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இலங்கையுடனான ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்தி இலங்கை நாட்டுக்கும் மக்களுக்கும் முழுமையான உதவிகளை வழங்க தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன, இதற்கு உலகின் அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பும் நட்புறவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொண்டு நல்லிணக்க கொள்கையுடன் பயணிக்கும் இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக தனிப்பட்ட முறையில் இலங்கைக்கு விஜயம்செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .