2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு வேந்தல் செவ்வாய்க்கிழமை (26) அன்று உணர்வு பூர்வமாக  அனுஸ்டிக்கப்பட்டது.

35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலை சாட்சி நினைவிடத்தில் தீவக மக்கள் ஒன்று கூடி தமது உறவுகளை நினைவு கூறி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இருவர் முதன்மைச் சுடரேற்றி நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து ஆரம்பமான அஞ்சலி நிகழ்வில் ஏற்பாட்டாளர் பிரகலாதன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.அசோக்குமார் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்தினர்.

26.08.1990 ஆம் ஆண்டு தீவக பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்பட்டு இருந்தனர். 

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வழு சாட்சியங்கள் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினர் கூறி வரும் நிலையில் கடந்த 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் பிரகலாதன் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் குறித்த படுகொலைக்கு சாட்சியான இடமாக கூறப்படும் சுமார் 50 க்கும் மேற்பட்ட உடலங்கள் இருப்பதாக கூறப்படும் கிணறு மக்களால் அடையாளம் காணப்பட்ட அவ்விடம் நினைவு கூறப்பட்டு வந்தது. 

அதே நேரம் குறித்த சம்பவம் தொடர்பான வழு சாட்சியாக இருக்கும் படுகொலை செய்யப்பட்ட இருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும் வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து கூறியிருந்தனர்.

இதன் போது கணவனையும் சகோதரனையும் இழந்த தாயார் கூறுகையில்   1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது.

இதில் தனது கணவரும் சகோதரனும் கைது செய்யப்பட்டு இராணுவத்தால் என் கண் முன்னே கைது செய்யப்பட்டு எனது உறவினர் ஒருவரது வீட்டின் பின் பகுதியில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.

அதன் பின்னர் சுட்டுக் கொன்றனர்.  இந்த கோர சம்பவத்துக்கு நான்  சாட்சி. அத்துடன் எனது சகோதரனின் மனைவியையும் இன்னொரு இளம் பெண்ணையும் கைது செய்து ஒரு வீட்டுக்குள் கொண்டு சென்றனர்.

அவர்கள் இருவரையும் இராணுவத்தின் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த துடன் உள்ளாடைகளைக் கூட கையில் கொடுத்து அனுப்பிய கொடுமையையும் நான் நேரில் கண்டு அனுபவித்தேன்.

அதே போன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர் மக்களைக் கொண்டு சேர்த்து கிணறுகளில் போட்டு மூடினர்.  இவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூரப்படும் கிணறு. இந்த கிணறு போன்ற இன்னும் சில இருக்கின்றன என கண்ணீருடன்  கூறினார்.

நிதர்சன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .