
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் ரங்கன ஹேரத்தின் அபாரமான பந்துவீச்சின் மூலம் இலங்கை அணி போட்டியில் சமநிலை தன்மையை உருவாக்கியுள்ளது. ரங்கன ஹேரத் 9 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் பலமான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, 332 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. சப்ராஸ் அஹமட் தனது கன்னிச்சத்தத்தைப் பெற்றுக் கொண்டார். 103 ஓட்டங்களை அவர் பெற்றுக் கொண்டார். அஹமட் செஷாட் 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தமது இரண்டாம் இன்னிங்சிற்காக இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் குமார் சங்ககார 58 ஓட்டங்களையும் மஹேல ஜெயவர்தன 49 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர். உப்புல் தரங்க 45 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அப்துர் ரெஹ்மான் 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உப்புல் தரங்க 92 ஓட்டங்களையும், கௌஷால் சில்வா 41 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் ஜுனைட் கான் 5 விக்கெட்களையும், வஹாப் ரியாஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதல் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.