
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் அரை இறுதிப் போட்டியில் ஜேர்மனி அணி சாதனையுடன் கூடிய வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 19ஆவது உலகக்கிண்ணத்தில் விளையாடும் ஜேர்மனி அணி, எட்டாவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. உலகக் கிண்ணத்தை நடாத்தும் பிரேசில் அணியுடன் மோதிய ஜேர்மனி, 7 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டி ஒன்றில் பெறப்பட்ட கூடுதலான கோல்கள் என்ற சாதனையுடன் இறதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. கால்பந்தாட்ட வரலாற்றில் மோசமான தோல்வியை பிரேசில் அணி இன்று பெற்றுக் கொண்டது.
ஜேர்மனி அணி சார்பாக டோனி க்ரூஸ் 24, 26ஆவது நிமிடங்களில் இரு கோல்களை அடித்தார். அன்றே சேர்லே 69, 79ஆவது நிமிடங்களில் இரு கோல்களை அடித்தார். தோமஸ் முல்லர் 11ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். 23ஆவது நிமிடத்தில் மிர்லவ் க்ளோஸே அடித்த கோல் மூலம் உலகக் கிண்ண தொடர்களில் கூடுதலான கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை தனதாக்கினார். அவர் மொத்தமாக 16 கோல்களை அடித்துள்ளார். இதற்கு முன்னர் 15 கோல்கள் என்ற சாதனை பிரேசில் வீரர் ரொனால்டோ வசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது. சமி கெதீரா 29ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்தார். 90ஆவது நிமிடத்தில் பிரேசில் அணி சார்பாக ஒஸ்கார் கோலை அடித்தார்.
நாளை அதிகாலை 1.30 இற்கு நடைபெறவிருக்கும் நெதர்லாந்து, ஆர்ஜன்டீனா அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி, ஜேர்மனி அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும்.