.jpg)
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று ஆரம்பித்துள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இலங்கை அணியின் ஆரம்பம் நன்றாக இருந்த போதும் மத்திய தர வரிசை வீரர்கள் சிறப்பாக துடுப்பாட தவறி விட்டனர். நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடி வரும் இலங்கை அணி, முதல் நாள் நிறைவில் 85.1 ஓவர்களில் 08 விக்கெட்கள் இழப்பிற்கு 261 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் உப்புல் தரங்க 92 ஓட்டங்களையும், கௌஷால் சில்வா 41 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் ஜுனைட் கான் 4 விக்கெட்களையும், வஹாப் ரியாஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 79 ஓட்டங்களை உப்புல் தரங்க, கௌஷால் சில்வா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் அணி தோல்விகளை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 போட்டிகள் நடைபெற்றுள்ளன. 4 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. 1 போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.
மஹேல ஜெயவர்தன தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றார். துடுப்பாட மஹேல ஜெயவர்தன களமிறங்கிய வேளையில் பாகிஸ்தான் வீரர்கள் அணி வகுத்து நின்று அவரை மைதானத்துக்குள் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது. இன்று 4 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டார்.