.jpg)
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சசித்திர சேனாநாயக்க, அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளார். அவுஸ்திரேலியா, பேர்த் நகரிலுள்ள மேற்கு அவுஸ்திரேலியா பலகலைக்கழகத்தில் தனது பந்துவீச்சு முறையில் மாற்றங்களை செய்து கொண்டு நேற்று (21) நாடு திரும்பியுள்ளார். மேற்கு அவுஸ்திரேலியா பலகலைக்கழகத்தின் டரில் பொஸ்டர், சசித்திர சேனநாயக்கவின் பந்துவீச்சை உயிரியல் இயந்திர தொழில் நுட்பத்தின் உதவி மூலம் மாற்றியமைத்துளார்.
சர்வதேசக் கிரிக்கெட் பேரவை, சசித்திர சேனநாயக்க பந்தை விதிமுறைகளை மீறி வீசி எறிகின்றார் என்ற சந்தேகத்தின் பேரில் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதன்படி அவர்களின் சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சசித்திர சேனநாயக்க பந்துவீசுவதில் இருந்து தடைசெய்யப்பட்டார். இப்போது இவருடைய பந்துவீச்சு விதிமுறைகளுக்கு உட்பட்டதாக மாறியுள்ளது எனவும் மீண்டும் விரைவில் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பரிசோதனையில் பங்கு பற்றி தனது பந்து வீச்சினை நிரூபித்து போட்டிகளில் விளையாடுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலியா பலகலைக்கழகத்தின் அறிக்கை வந்ததும் உடனடியாக சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் அங்கிகரிக்கப்பட்ட இங்கிலாந்து கார்டிப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜெரோம் ஜெயரட்ன, குறித்த அவுஸ்திரேலியா சுற்றுலாவில் சசித்திர சேனநாயக்கவுடன் இணைந்து இருந்து, தேவையான பணிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.