.jpg)
சம்பியன் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் லாகூர் லயன்ஸ் , சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
லாகூர் லயன்ஸ், டொல்பின் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் லாகூர் லயன்ஸ் அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்த டொல்பின் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. முதலில் துடுப்பாடிய லாகூர் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உமர் அக்மல் 73 ஓட்டங்களையும், சாட் நசீம் 43 ஓட்டங்களையும் பெற்றனர். ரொபி பிரைலிங்க் பந்துவீச்சில் 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய டொல்பின்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ரொபி பிரைலிங்க் 63 ஓட்டங்களையும், வன் வைக் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் ஹபீஸ், முஸ்தபா இக்பால், சாட் நசீம் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் , பேர்த் ஸ்கொச்செர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர்கிங்ஸ் அணி 13 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரவீந்தர் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும், டோனி 35 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பாடிய பேர்த் ஸ்கொச்செர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. நேதன் கோட்லர் நைல் 30 ஓட்டங்களை துடுப்பாட்டத்தில் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் அஷ்வின் 3 விக்கெட்களையும், ஆஷிஸ் நெஹ்ரா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் தோல்வியடைந்துள்ள அணி அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளது.