
பாகிஸ்தான் அணியின் வீரர் யூனுஸ் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகத்துக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டமைக்கும், தான் இல்லாமல் டெஸ்ட் அணியை எவ்வாறு கட்டி எழுப்புகின்றனர் என நான் பாக்கின்றேன் என சவால் விட்டமைக்கும் எதிராக எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
யூனுஸ் கான் இவ்வாறு நடந்து கொண்டது சிறுபிள்ளை தனமான செயல் என அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்துக்கு உட்பட்ட ஒரு வீரர் இவ்வாறு நடந்து கொண்டமைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும். ஆனாலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என சஹாரியார் கான் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது. யூனுஸ் கான் ஒரு சிரேஸ்ட வீரர். நாங்கள் அவர் மீது பெரிய மரியாதை வைத்துள்ளோம் எனவும் சஹாரியார் கான் கூறியுள்ளார். அவருக்கு கடிதம் மூலம் இவ்வாறு இனி வரும் காலங்களில் நடந்து கொள்ளவேண்டாம் என அறிவுறித்தியுள்ளோம். இது அவரின் மரியாதைக்கும் நல்லது அல்ல. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளோம். அவர் நிலைமைகளை விளங்கிக்கொள்வார் என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நான் விரைவில் அவரை சந்திக்கவுள்ளேன். அப்போது அவருடன் பேசி அவருடைய பிரச்சினைகளை கேட்டறியவுள்ளேன். ஆனால் அவுஸ்திரேலியா அணிக்கான ஒருநாள் அணியை தெரிவுக்குழு தெரிவு செய்துவிட்டது என மேலும் சஹாரியார் கான் தெரிவித்துள்ளார்.